மக்களை இழிவு படுத்த வேண்டாம்!
வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துவரும் ‘கிடுகிடு’ நடவடிக்கைகளுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.
எப்போதுமே இதே போல வாகன சோதனைகளை நடத்தினால் கறுப்புப் பண நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி விடலாமே என்று அங்கலாய்க்கும் அளவுக்கு சிலர் உணர்ச்சிவசப் படுவதையும் பார்க்க முடிகிறது.
தேர்தல் ஆணையத்தின் தேவையற்ற கெடுபிடிகளுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் கருணாநிதி மீது சிலர் சந்தேககக் கணைகளைத் தொடுத்திருப்பது இதில் கூடுதல் சுவாரஸ்யம்.
ஊழலற்ற ஜனநாயகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை நம்மைப் புல்லரிக்க வைக்கிறது. போகட்டும்.
இதில் தேர்தல் ஆணையம் யாரைத் திருடர்களாகப் பார்க்கிறது?
மக்களையா, அரசியல் கட்சிகளையா?
சந்தேகமே இல்லாமல் மக்களைத்தான்.
ஏனென்றால் அரசியல் கட்சிகள் என்றைக்கிருந்தாலும் தங்களை ஆட்டிப்படைக்கும் எஜமானர் நாற்காலியில் அமருவார்கள் என்பது தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன?
இதில் கொடுமை என்னவென்றால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இடதுசாரிகள் கூட அவ்வப்போது குரல் எழுப்புவதுதான்.
அப்படி என்றால் மக்களின் அரசியல் உணர்ச்சி மீதும், அரசியல் நாணயத்தின் மீதும் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை .
மக்களைத் திரட்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய இடதுசாரிகளே மக்களை குற்றவாளிகளாகப் பார்க்கும் போக்கு, எப்படி உருவானது?
தமிழகத்தில், உண்மையான அரசியலின் பக்கம் மக்களைத் திருப்புவதற்கான வாய்ப்பை, வரலாறு இடதுசாரிகளுக்கு அளித்த போதெல்லாம், அவர்கள் அதைச் செய்யத்தவறிவிட்டார்கள் என்பதே உண்மை.
70 களில் திமுகவுக்கும், கருணாநிதிக்கும் எதிராக மக்களைத் திரட்ட தங்களது அரசியல் கருத்தின் வலிமையை விட எம்.ஜி.ஆரின் முகவிலாசத்தைத்தான் அவர்கள் நம்பினார்கள்.
இந்த தேர்தலின் போது மட்டும் என்ன?
கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் 160 தொகுதிகளுக்கும் தமது கட்சி வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதாவின் எதேச்சதிகாரப் போக்கு, மீண்டும் ஒரு வரலாற்று வாய்ப்பை இடதுசாரிகளுக்கு ஏற்படுத்தித் தந்தது.
ஆனால் அப்போதும் இவர்கள் என்ன செய்தார்கள்.
ஓரளவுக்கேனும் அடிப்படையான அரசியல் கோட்பாடுகளுடன் கட்சி நடத்தி வரும் வைகோவைத் தேடி இவர்கள் செல்லவில்லை. விஜயகாந்தைத் தான் தேடிச் சென்றார்கள்.
தங்களது அரசியல் நாணயத்தின் மீது இன்றுவரை நம்பிக்கை வைத்திருக்கும் சிறுபான்மை மக்கள் கூட்டத்தை அரசியல் அணியமாக திரட்ட முடியும் என்ற குறைந்த பட்ச நம்பிக்கை இடதுசாரிகளுக்குக் கூட இல்லாமல் போனதுதான் சோகம்.
தங்களது அரசியலை நகர்த்திச் செல்ல எப்போதுமே ஒரு வசீகரமான முகவிலாசத்தை இவர்கள் தேர்வு செய்யும் போது, அப்பாவி மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
விஜயகாந்த் போன்றவர்கள் கடந்த தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் போது வாக்காளர்களிடம் என்ன சொன்னார்கள்? இப்போதும் என்ன சொல்லிவிடப் போகிறார்கள்?
‘யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். வாக்கை மட்டும் எங்களுக்கு அளித்துவிடுங்கள்’
என்ன ஒரு அரசியல் தத்துவம்.
வாக்குகளை பணத்திற்கு விற்கும் பிச்சைக்காரர்கள் என்பதுதான் மக்கள் குறித்த இவர்களது மதிப்பீடு.
தனது தலைமையிலான அரசைக் காப்பாற்றிக் கொள்ள, ‘மிஸ்டர் கிளீன்’ என்று புகழப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்துள்ள புகார், நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.
எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லும் ஒருவர் எதற்கு பிரதமராக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவரை நோக்கி எழுப்பிய கேள்வி அவமானகரமானது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குறிப்பிட்ட துறை அல்லது நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப, உறுப்பினர்கள் பணம் வாங்கியதாக எழுந்த புகார், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான அடிப்படை நம்பிக்கையையே ஆட்டம்காண வைத்துவிட்டது.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எளிய மக்கள் மட்டும் உத்தமர்களாக இருக்க வேண்டும் என்று எந்த அடிப்படையில் எதிர்பார்ப்பது?
நாட்டின் விடுதலைக்காக தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்த அதே எளிய மக்கள்தான், இன்று இந்த மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
‘கடைசி நேரத்துல காச வாங்கிக்கிட்டு ஓட்டப் போட்டுறுவாணுகப்பா’
மிகப்பெரிய அறிவு ஜீவிகளில் இருந்து, சாமான்ய பார்வையாளர்கள் வரை இந்த வார்த்தைகளை அநாயாசமாக பயன்படுத்துகிறார்கள்.
அவர்களது பொதுப்புத்தியில் மக்கள் என்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுகளை விற்பனை செய்யும் மலின புத்தி படைத்தவர்கள் என்ற மதிப்பீடு மட்டுமே துருத்திக் கொண்டு நிற்கிறது.
எத்தனை தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை பெற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்துள்ளன?
ஒரு பொதுத்தேர்தலில் அது சாத்தியமா?
இதுபோன்ற கேள்விகளை யாருமே எழுப்புவதில்லை.
தேர்தலில், பண பலமும், ஆள் பலமும் ஆதிக்கம் செலுத்துவதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது மட்டுமே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் முழுமையான சக்தியாக செயல்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.
திட்டங்கள் குறித்த அறிவிப்பு, கடந்த ஆட்சிக்காலத்தில் அந்த அரசின் நிர்வாகத்தன்மை, மக்களிடம் அந்த அரசு கொண்டிருந்த அணுகுமுறை என பல்வேறு அம்சங்களை அலசிப்பார்த்துத்தான் அடித்தட்டு மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள்.
அவர்கள்தான் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறார்கள்.
ஆனால், தேர்தல் முறைகேடுகள் குறித்து அடிக்கடி அங்கலாய்க்கும் அறிவுஜீவிகளில் பெரும்பாலோர், வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் குறைந்த பட்சக் கடமையைக் கூட நிறைவேற்றுவதில்லை.
அடித்தட்டு மக்களை திருடர்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் சித்தரித்து, விமர்சிப்பது மட்டுமே இவர்கள் ஆற்றும் மேலான ஜனநாயக கடமை.
இலவசங்கள், வாக்களிக்க லஞ்சம் வாங்குவது இவற்றையெல்லாம் தாண்டி, அடித்தட்டு மக்களிடம் அழுத்தமான அரசியல் உணர்வு நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருப்பதை, அவர்களோடு நெருக்கமும், அக்கறையும் கொண்டவர்கள் அறிவார்கள்.
அவர்களை அணிதிரட்டவும், அவர்களது அரசியல் உணர்வுக்கு வடிவம் கொடுக்கவும் தவறியது யார் குற்றம்?
இடது சாரிகளைப் போன்ற சில சக்திகளும், மக்களை அரசியல் படுத்தக் கிடைக்கும் மகத்தான தருணங்கள் அனைத்தையும், கவர்ச்சியான தலைவர்களைத் தேடி, ஓடி அலைவதிலேயே கழித்து விடுகிறார்கள்.
இவ்வளவு மோசமான சூழலிலும், அவ்வப்போது தாங்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதை மக்கள் உணர்த்த தவறியது இல்லை.
1967ல் காங்கிரஸ் மீது ஏற்பட்ட சலிப்பால் திமுகவைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயங்கவில்லை.
1977பொதுத் தேர்தலில், இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்துக்கு எதிராக சவுக்கடி கொடுக்கவும் மக்கள் தயங்கவில்லை.
1996 தேர்தலில் ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக வாக்களிக்கவும் தவறவில்லை.
2001ல் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கவும் மக்கள் தவறவில்லை.
2006 சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் எதேச்சதிகார நடைமுறைகளுக்கு பாடம் புகட்டவும் அவர்கள் தயங்கவில்லை.
இது போன்ற பல ஆட்சி மாற்றங்களை மக்கள் தன்னிச்சையாக தீர்மானித்திருப்பதை நாம் மறுக்க முடியாது.
மேற்கண்ட எந்த தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துத்தான் வெற்றி வாங்கப்பட்டது என முழுமையாக கூறிவிட முடியாது.
தேர்தல் முறைகேடுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அவ்வளவுதான்.
அடித்தட்டு மக்களை சரியான முறையில் அரசியல் படுத்தும் போது, இது போன்ற தேர்தல் தில்லுமுல்லுகள், தாமாகவே காணாமல் போய்விடும். அதை விடுத்து மக்களை ‘ஓட்டுக்கு காசுவாங்கும்’ கயவர்களாக சித்தரிக்கும் சிறுமைத்தனத்தை, அரசியலைப் புனிதப்படுத்த விரும்பும் ‘ரொம்ப நல்லவர்கள்’ கைவிட வேண்டும்.
மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டால், அதற்கு கைம்மாறாக எதையும் எதிர்பார்ப்பதில்லை.
மேனா.உலகநாதன்
நன்றி : தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு)