Saturday, March 5, 2011

இ(எ)ப்போதும் ஏமாற்றம்தான்…

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் வரிகள், விவசாயிகளுக்கு தற்போதெல்லாம் பெரிய நம்பிக்கையைக் கொடுப்பதில்லை.
எத்தனை காலத்துக்கு வேண்டுமனாலும் மக்களை ஏமாற்றலாம் என்பதை நமது அரசுகள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதே அதற்கு காரணம்.

2011- 12ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மூலம், மத்திய அரசு தனக்கு இருக்கும் அந்த ‘புரிதல் தெளிவை’ மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 
விவசாயத்தை நம்பிக்கையூட்டும் வாழ்வாதாரத் தொழிலாக மாற்றுவதற்குரிய சிறப்பான எந்த அம்சமும், இடம்பெறாமலே இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்து முடித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி.

2011 – 12ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய ஒரே அறிவிப்பு, உணவு உறுதித் திட்டத்திற்கான மசோதா, நடப்பாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது மட்டும்தான் என்கிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

ஆனால், அதற்கான நிதி ஆதாரமே ஒதுக்கப்படாமல், எப்படி அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்கிறார் மற்றொரு பொருளாதர விமர்சகர். கடந்த 2010 – 11ம் ஆண்டு, உணவுப் பொருள் மானியத்துக்காக 60 ஆயிரத்து 599,53 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தற்போதைய 2011 – 12ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அதனை  60 ஆயிரத்து 572.98 கோடி ரூபாயாக குறைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பின்னர் எப்படி, உணவு உறுதித் திட்டத்தை முறையாக நிறைவேற்ற முடியும்?

முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு விவசாயக்கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி செய்யவும் சக்தி இன்றி, அதற்கு உரிய விலையைப் பெறவும் வழி இன்றித் தவிக்கும் இந்திய விவசாயி, எங்கிருந்து தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவான்?

உணவு பதனிடும் தொழில் நுட்பத்தின் பக்கம் மத்திய அரசின் கவனம் முதல் முறையாகத் திரும்பி இருப்பது, இந்த பட்ஜெட்டில் தென்படும் ஓர் ஆறுதலான அம்சம் எனலாம்.

மற்றபடி, அடுத்த தலைமுறையினரை ஈர்க்கும் வசீகரம் மிக்க தொழிலாக விவசாயத்தை மேம்படுத்தும் எத்தகைய தொலை நோக்கு வியூகங்களும் மத்திய அரசிடம் இல்லை என்பது, இந்த பட்ஜெட்  அறிக்கை மூலம் மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்கள் யாரும் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பாத நிலையில், அவர்களை ஈர்ப்பதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருப்பது இங்கே கவனத்துக்குரியது.

வேளாண் படிப்பில் பட்டம்பெற்ற பெரும்பாலான இளைஞர்கள், ஏதாவது ஒரு நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுவதையே விரும்புகின்றனர்.
அவர்களின் இத்தகைய மனப்போக்கில் மாற்றம் ஏற்பட, விவசாயத்தை நாட்டின் முழுமையான ஆதாரத்தொழிலாக வளர்த்தெடுப்பதற்கான நேர்மையான முயற்சிகள் தேவை. அதனை நமது சரத்பவார் போன்றவர்களிடம் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பல முறை வலியுறுத்தி உள்ளார். ஆனால், மத்திய அரசே, இதுவரை  அதனைச் செய்ய முன்வரவில்லை என்பதுதான் வேதனை.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வழியில், ரயில்வேத்துறைக்கென்று தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதை தன் சிரமேற்கொண்ட கடமையாக கருதி நிறைவேற்றிவரும் மத்திய அரசு, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை, தனிப்பெருந்தொழிலாக இதுவரை அங்கீகரிக்கத் தயாரக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அண்மையில், கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா தலைமையிலான அரசு, விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம், அத்துறையின் அடிப்படையான பிரச்சனைகளில் அம்மாநில அரசு மிக அழுத்தமாக தன் கவனத்தைச் செலுத்தி உள்ளது.

அதனைப் புரிந்து கொள்ள கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டின் சில அம்சங்கள் இதோ….
·         நவீன உணவுப் பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.

·         சுவர்ண பூமி திட்டப்படி 10 லட்சம் விவசாயிகள் குடும்பங்கள் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

·         கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒரு சதவகித வட்டியில் கடன்.

·         இயற்கை உர விவசாய வளர்ச்சிக்கு ரூ.200 கோடி.

·         உயிரி எரிபொருள் திட்ட மேம்பாட்டுக்கு ரூ.125 கோடி.

·         விவசாயக் கருவிகள் மானியத்துக்கு ரூ.100 கோடி.

·         நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கான பூ சேத்தனா திட்டத்துக்கு ரூ.40 கோடி.

·         விவசாய அடிப்படை கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்குதல்.

·         விவசாய மின் இணைப்புகளை பலப்படுத்த ரூ.3,900 கோடி ஒதுக்கீடு.

·         ஏரிகளைத் தூர்வாரவும், அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்
ரூ.1000 கோடி.

·         உயர் கல்வி படிக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு வட்டி இல்லாத
கடனுதவி.

·         2011 முதல் 2020-ம் வரையிலான ஆண்டை நீர்ப்பாசன ஆண்டாக அறிவித்து நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ.50 ஆயிரம் கோடி திரட்டுதல்.

என இன்னும் பல அம்சங்கள்....

கர்நாடக மாநில அரசின் பட்ஜெட்டை தமிழகத்தில் பட்டியலிட்டு என்ன செய்ய என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகம் உட்பட மற்ற மாநில அரசுகளும் இதனைப் பின்பற்றலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

மத்திய அரசு மரபணு மாற்ற விவசாயத்தை ஆதரிக்கும் நிலையில், கர்நாடக மாநில அரசு, இயற்கை வேளாண்மைக்கும், நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்குகிறது.

இதில் இருந்தே மாநில அரசுகள், வேளாண்மைக்கென்று தனிக்கொள்கையையும், நிதி நிலை அறிக்கையையும் வகுப்பதில் உள்ள அனுகூலம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இளைஞர்கள் ஏற்கும் தொழிலாக விவசாயத்தை மாற்றுவதற்கான திட்டத்தோடு, மண்வளத்தைப் பாதிக்காத வேளாண்முறையையும் அதன் மூலம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை,  கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளும் ஏன் இதனைப் பின்பற்றக்கூடாது?

மேனா. உலகநாதன்

நன்றி தினமலர் - செய்திமலர்