Thursday, March 10, 2011


தேர்தல் திருவிழாவில் காணாமல் போகும் விவசாயிகள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்பு அதன் உச்சக் கட்டத்தை நெருங்கி வருகிறது. கூட்டணி குறித்த கூட்டல், கழித்தல் கணக்குகள் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வாக்குகளை அறுவடை செய்வதற்கான வியூகங்களை வகுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தேர்தல் திருவிழாவில் உதிரிக்கட்சிகள் கூட உற்சாகத்துடன் வலம் வருகின்றன. சக்திக்குத் தகுந்த ‘சீட்டு’கள். இல்லாவிட்டால் ‘நிபந்தனையற்ற ஆதரவு’ என்ற  அறிவிப்புடன், அகப்பட்டதை சுருட்டி அரசியல் வியாபாரத்தில் லாபம் பார்த்துவிடுவது என்பதே அவர்களது அதிகபட்ச வேலைத்திட்டம். இப்படி, ஜாதி, வட்டாரம், தொழில் என ஏதோ ஓர் அடிப்படையில்  உதிரி இயக்கங்களாக ஒண்றிணைந்து, தேர்தல் காற்று வீசும்போதே தூற்றிக் கொள்ளத் தயாராகி விட்டன பல அமைப்புகள்.

ஆனால், கிராமப்புற வாக்குவங்கியின் பெரும்பான்மை எண்ணிக்கையாக இருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மட்டும் இந்த தேர்தல் கால செப்படி வித்தை எப்போதுமே சாத்தியமாவதில்லை.

அறுபது ஆண்டுகால ஜனநாயகத்தில் எந்த நிறைவையும் எட்ட முடியாமல் தவிக்கும் சில சபிக்கப்பட்ட மக்கள் பிரிவில் விவசாயிகள் முக்கியமானவர்கள். ஆனால், தேர்தல் காலத்தில் வெறும் வாக்களிக்கும் மனிதக் கருவிகளாக மட்டுமே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள். 

சங்கங்கள் என்ற பெயரில் விவசாயிகளை  ஒருங்கிணைக்கும் சில இயக்கங்களும், முறையான அரசியல் பயிற்சி எதையும் அவர்களுக்கு அளிப்பதில்லை. கையாகவும், தாமரையாகவும், உதய சூரியனாகவும், இரட்டை இலையாகவும், பம்பரமாகவும் இன்னபிற ஓட்டுக் கட்சிகளின் சின்னங்களாகவும் கூழாங்கற்களைப் போல, விவசாயிகளின் அரசியல் பேராற்றல் சிதறுண்டு கிடக்கிறது.

கடன் தள்ளுபடி பெறுதல், மானிய விலையில் உரங்கள், விதைகள் பெறுதல் என்ற அளவில் விவசாயிகளின் அரசியல் தேவைகள் இங்கே குறுக்கப்படுகின்றன.
அனைத்து அரசியல், சமூக செயற்பாடுகளும் விவசாயிகளை நோக்கியே செல்லுவது போல நமக்குத் தோன்றுவது உண்டு. ஆனாலும் அவை  வெறும் தோற்றப்பிழைகள் என்பதே உண்மை.

அது உண்மையாக இருந்திருந்தால், தகவல் தொழில் நுட்பம் மட்டுமே  முதற்பெருந் தொழிலாக இன்று அடையாளம் காணப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.

உற்பத்தித் தொழிலான விவசாயத்தை முற்றிலும் ஓரங்கட்டி விட்டு, ‘தரகு’வேலையான தகவல் தொழில் நுட்பத்தை மட்டுமே,  நாட்டின் வளர்ச்சிக்கான வழியாகச் சித்தரிக்கும் கோட்பாட்டு மோசடியும் அரங்கேறி இருக்காது.

அத்தகைய கோட்பாட்டு மோசடி என்ற பெருவிருட்ச நிழலில் பெருகித்தழைத்த விழுதுகள்தான், ஸ்பெட்க்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு போன்ற மிகப்பெரிய பொருளாதார மோசடிகள்.

இது ஒருபுறம் இருக்க, தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக ஒரு காலக்கட்டத்தில் இருந்த விவசாய சங்கங்கள் இன்று ஏன் இப்படி முகவரி இழந்து நிற்கின்றன?
தமிழக அரசியலில் தோல்வியையே சந்திக்காத எம்.ஜி.ஆர், 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு, நாராயணசாமி நாயுடு தலைமையில் இயங்கிய விவசாய சங்கத்தின் எதிர்ப்பும் ஒரு முக்கியக் காரணம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

அடுத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதே நாராயணசாமி நாயுடுவின் வீட்டிற்கே சென்று சந்தித்து, அவரது ஆதரவைக் கோரிப்பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர்.
சரியாகவோ, தவறாகவோ, விவசாயிகளின் பேராற்றலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தையும் நாராயணசாமி நாயுடு ஏற்படுத்தி உள்ளார்.
ஏன் இப்போது அது சாத்தியப் படவில்லை?

விவசாய சங்கங்கள் அந்த ஆளுமையை இழந்து நிற்க காரணம் என்ன?
விவசாயிகளின் தற்சார்பு என்ற அந்தரங்க பலம் நசுக்கப்பட்டதே (demoralise) அதற்குக் காரணம்.
இலவசங்களுக்கும், மானியத்திற்கும் கையேந்தும் பிச்சைக்காரர்களின் நிலைக்கு அவர்களை அரசியல் கட்சிகள் தள்ளி விட்டன.

மனித இனத்தின் அனைத்து ஆற்றலையும் அர்த்தமற்றதாக்கிவிடும் வறுமை, பசி, நோய் இவை மூன்றும் விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்களாகின.
இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இந்த மூன்று அடிப்படைத் தேவைகளை அடைவதற்காகவே, இந்திய விவசாயி தன் ஆயுள்காலம் முழுவதும் போராடுகிறான். அவனது குழந்தைகளுக்கு சத்துள்ள உணவு, நல்ல கல்வி என்பது பலிக்காத நெடுங்கனவாகவே நீடித்து வருகிறது.

தமிழகத்தின் கடைக்கோடி விவசாயியைப்  பொறுத்தவரை தேர்தல் என்பது என்ன?
ஓட்டுக்குப் பணம் கிடைக்கும். வாக்குப் பதிவன்று பிரியாணிப் பொட்டலங்கள் கூட கிடைக்க வாய்ப்புண்டு. மோதிரங்கள், குடங்கள் என இன்னும் சில பொருட்களும் கிடைக்கலாம். உள்ளூர்த்தலைவர் சார்ந்துள்ள கட்சிகளின் வசதியையும், செல்வாக்கையும் பொறுத்தது. சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய அற்ப சந்தோஷங்களுடன் வந்து போகும் ஒரு ஜனநாயகத் திருவிழா என்பதைத் தவிர, தேர்தல் குறித்து அவர்களுக்கு எந்த மதிப்பீடும் இல்லை.

பசுமைப் புரட்சி என்ற பெயரால் தங்களது மண்ணும், வாழ்வும் மழுங்கடிக்கப்பட்ட சோகத்தை அவர்கள் இதுவரை உணரவில்லை.

இத்தனை ஆண்டுகளாகத் தாங்கள் பயன்படுத்தி வரும் வேதி உரங்களால் வளமானது பெருமுதலாளிகள் சிலரே தவிர தங்களது மண்ணோ, வாழ்வோ இல்லை என்ற உண்மையும் அவர்களுக்கு புரிவதில்லை.

39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீராதாரங்கள் இருந்த இடம் தெரியாமல் போன மாயம் குறித்தும் அவர்களுக்கு தெரியவில்லை.

இவற்றின் விளைவே விவசாயம் என்ற தொழில் இன்று அழிவை நோக்கிச் சரியத் தொடங்கி இருப்பது என்ற யதார்த்தமும் அவர்களுக்கு புரியவில்லை.

ஏற்கனவே நடைபெற்ற பசுமைப் புரட்சியால், உயிர்ச்சத்து உறிஞ்சப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் மண்ணின் மீது, இன்னுமொரு பசுமைப் புரட்சி எனும் ருத்திர தாண்டவத்தை ஆடி முடிக்க நமது அரசுகள் தயாராகி விட்ட விபரீதத்தையும் அவர்களால்  உணர முடியவில்லை.

தங்களிடமிருந்து மிக குறைந்த விலைக்கு வாங்கப்படும் கத்திரிக்காய், கடைகளில் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படும் மாயம் என்ன என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இப்படித் தன்னுணர்வு எதுவும் அற்ற விட்டில் பூச்சிகளைப் போல விவசாயிகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கான அரசியலும், தேவையும் என்ன என்பதை அடையாளம் காண முடியாத விசாயிகள், வாக்குவங்கி அரசியல் வர்த்தகத்தில், செல்லாத ரூபாய் நோட்டுகளைப் போலச் சீரழிகிறார்கள்.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம், உற்பத்திக்கு உரிய விலை… என விவசாய சங்கங்கள் வழக்கமாக முன்வைக்கும் மிகச்சில முழக்கங்களும் கூட, அரசியல் உள்ளீடற்ற வெற்றுப் புலம்பலாய் மெல்ல மெல்லத் தேய்ந்து வருகின்றன.

வாக்காளர்களில் 50 விழுக்காடாகவும், மக்கள் தொகையில் 70 விழுக்கடாகவும் இருக்கும் விவசாயிகள், தேர்தல் நேரத்தில் தங்கள் தேவைகள் குறித்து குரல் எழுப்பவும், நிபந்தனைகளை முன்வைக்கவும் திராணியற்றவர்களாக மௌனித்திருப்பது, அவர்களுக்கு மட்டும் அல்ல, நாட்டுக்கும்  நல்லதல்ல.

இந்த லட்சணத்தில், அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களை விவசாயிகள் என்று சொல்லிக் கொள்வதுதான் வேடிக்கை. ஆனால், சாதாரண  குடிமகன் ஒருவன் தன்னை விவசாயி என்று பிறரிடம் அறிமுகப் படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறான் என்பதே உண்மை.

கட்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, அடிப்படைப் பிரச்சனைகளை முன்னிறுத்தும் அணுகுமுறையை விவசாய அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் கிளைகளாகச் செயல்படும் விவசாய அமைப்புகளால், அது சாத்தியமில்லை.

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இயக்கங்களாக விவசாய அமைப்புகள் இயங்கத் தொடங்கும் போதுதான், அவற்றின் பலம் அரசியல் வாதிகளைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அதுதான் உண்மையான அரசியலும் கூட!
மேனா. உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்.

தொகுதி அறிமுகம் - 3

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி (பொது)





தொகுதி பெயர் : சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

வரிசை எண் : 19

அறிமுகம் : தமிழக சட்டப்பேரவை தொகுதிகளிலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளையும் இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி புதிதாக 2011-ல்தான் உருவாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்வர் கருணாநிதி இருந்து வருகிறார். திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதர் சயீத் (அ.தி.மு.க) உள்ளார். இதுவரை சேப்பாக்கம் தொகுதியில் 8 முறை தேர்தல் நடைபெற்று உள்ளது. முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள இத்தொகுதியில் 7 முறை திமுகவும், காங்கிரஸ் ஒரு முறையும் தேசிய லீக் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளது. 1989- நடைபெற்ற தேர்தலில் தேசிய லீக் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றது. முதல்வர் கருணாநிதி கடந்த மூன்று தேர்தல்களில் (1996, 2001, 2006) சேப்பாக்கம் தொகுதியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்.
சென்னை மாநகராட்சி வார்டு 79, வார்டு 81, வார்டு 82, வார்டு 83, வார்டு 84, வார்டு 85, வார்டு 86, வார்டு 87, வார்டு 88, வார்டு 89, வார்டு 90, வார்டு 91, வார்டு 92, வார்டு 93, வார்டு 95, வார்டு 111.

வாக்காளர்கள்:

ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
89,688 89,815 7 1,79,510

வாக்குச்சாவடிகள்:

மொத்தம் : 184

தேர்தல் நடத்தும் அதிகாரி/ தொடர்பு எண்:

சென்னை குடிநீர் வாரிய பொது மேலாளர் ப. பாஸ்கரன் - 78450 20000

தொகுதி அறிமுகம் - 2

கள்ளக்குறிச்சி (தனி)





* தொகுதி பெயர் : கள்ளக்குறிச்சி (தனி)
* தொகுதி எண் : 80
* அறிமுகம் :

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி 1952-ம் ஆண்டு இரட்டைமுறை வாக்கெடுப்பில் பொது தொகுதியாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1962-ல் கள்ளக்குறிச்சி தனி தொகுதியாக மாற்றப்பட்டது.

பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி பொது தொகுதியாக மாறியது. அதன் பிறகு 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், வடக்கனந்தல் பேருராட்சி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஒன்றியங்கள் இடம்பெற்றிருந்தன.
தற்போது தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சின்னசேலம் சட்டமன்ற பொது தொகுதி நீக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனித் தொகுதி உருவாக்கப்பட்டது.

* எல்லை :

இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகள், தியாகதுருகம் பேரூராட்சியின் 15 வார்டுகள், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், சின்னசேலம் ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள், தியாகதுருகம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நகராட்சி: கள்ளக்குறிச்சி- 21 வார்டுகள்
பேரூராட்சிகள்: தியாகதுருகம்- 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள்: 102

கள்ளக்குறிச்சி ஒன்றியம்:

(25) எரவார், இந்திலி, க.மாமனந்தல், காட்டனந்தல், மாடூர், மலைக்கோட்டாலம், மேலூர், நீலமங்கலம், நிறைமதி, பெருமங்கலம், பெருவங்கூர், பொற்படாக்குறிச்சி, புக்கிரவாரி, சிறுமங்கலம், சிறுவங்கூர், சிறுவத்தூர், தச்சூர், தென்கீரனூர், வீ.பாளையம், வானவரெட்டி, வரதப்பனூர், வீரசோழபுரம், விளம்பார், வினைதீர்த்தாபுரம், தென்தொரசலூர்.

சின்னசேலம் ஒன்றியம்:

(37) வி.அளம்பலம், அம்மையகரம், அம்மகளத்தூர், அனுமனந்தல், பங்காரம், எலவடி, ஈரியூர், ஈசாந்தை, காளசமுத்திரம், கனியாமூர், காரனூர், கருந்தலாக்குறிச்சி, கருங்குழி, கூகையூர், குதிரைச்சசந்தல், குரால், வி.மாமாந்தூர், மட்டிகைக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், மூங்கில்பாடி, நைனார்பாளையம், நல்லாத்தூர், நமச்சிவாயபுரம், பாக்கம்பாடி, பெத்தானூர், பெத்தாசமுத்திரம், பூண்டி, ராயப்பனூர், ராயர்பாளையம், சடையம்பட்டு, செம்பாக்குறிச்சி, தாகம்தீர்த்தாபுரம், தென்சிறுவலூர், தோட்டப்பாடி, உலகங்காத்தான், உலகிய நல்லூர், வாசுதேவனூர்.

தியாகதுருகம் ஒன்றியம்:

(38) அசகளத்தூர், சின்னமாம்பட்டு, சித்தலூர், சித்தாத்தூர், எறஞ்சி, ஈயனூர், குருபீடபுரம், காச்சக்குடி, கண்டாச்சிமங்கலம், கனங்கூர், கொங்கராயபாளையம், கூந்தலூர், கொட்டையூர், குடியநல்லூர், கூத்தக்குடி, மடம், மேல்விழி, முடியனூர், நாகலூர், நின்னையூர், ஒகையூர், பானையங்கால், பொரசக்குறிச்சி, பிரிதிவிமங்கலம், சாத்தனூர், புதுஉச்சிமேடு, சிறுநாகலூர், திம்மலை, தியாகை, உடையநாச்சி, வடதொரசலூர், வாழவந்தான்குப்பம், வரஞ்சரம், வடபூண்டி, வேளாக்குறிச்சி, வேங்கைவாடி, விளக்கூர், விருகாவூர்.

ரிஷிவந்தியம் ஒன்றியம்:

(2) அந்தியூர், குன்னியூர்.

* வாக்காளர்கள் :
ஆண் பெண் திருநங்கைகள் மொத்தம்
1,09,553 1,05,574 8 2,15,135

* வாக்குச்சாவடிகள் :
மொத்தம் 259
பொது 252, துணை வாக்குச்சாவடி 1, ஆண் 3, பெண் 3

* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
கோட்டாட்சியர் அ.ந.நாகபூஷ்ணராஜு : 9445000421

தொகுதி அறிமுகம் - 1

காட்டுமன்னார்கோவில் (தனி)



தொகுதி பெயர் : காட்டுமன்னார்கோவில் (தனி)
தொகுதி எண் : 159
அறிமுகம் :
காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி, கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.

தனித்தன்மை :

சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை ஆகிய 3 பேரூராட்சிகளும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள், குமராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கி காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேரூராட்சிகள் : 3

ஸ்ரீமுஷ்ணம் - 15 வார்டுகள்
காட்டுமன்னார்கோவில் - 18 வார்டுகள்
லால்பேட்டை - 15 வார்டுகள்
கிராம ஊராட்சிகள் : 112

கீரப்பாளையம் ஒன்றியம்: (21) கூடலையாத்தூர், கலியமலை, கந்தகுமாரன், கானூர், காவாலக்குடி, கோதண்டவிளாகம், குமாரக்குடி, மழவராயநல்லூர், நந்தீஸ்வரமங்கலம், நங்குடி, பாளையங்கோட்டை (கீழ்), பாளையங்கோட்டை (மேல்), பேரூர், பூர்த்தகங்குடி, புடையூர், ராமாபுரம், சோழத்தரம், வடக்குப்பாளையம், வலசக்காடு, வட்டத்தூர், முடிகண்டநல்லூர்.

காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் :

(55) ஆச்சாள்புரம், அகரபுத்தூர், ஆழங்காத்தான், அழிஞ்சிமங்கலம், அறந்தாங்கி, ஆயங்குடி, செட்டித்தாங்கல், ஈச்சம்பூண்டி, எசனூர், கள்ளிப்பாடி, கண்டமங்கலம், கண்டியாங்குப்பம், கஞ்சங்கொல்லை, கால்நாட்டாம்புலியூர், கருணாகரநல்லூர், கீழக்கடம்பூர், கீழபுளியம்பட்டு, கொக்கரசன்பேட்டை, கொள்ளுமேடு, கொழை, கொண்டசமுத்திரம், குணமங்கலம், குணவாசல், குஞ்சமேடு, குருங்குடி, கே.பூவிழந்தநல்லூர், ம.ஆதனூர், மதகளிர்மாணிக்கம், மா.மங்கலம், மானியம் ஆடூர், ம.உத்தமசோழகன், மேல்ராதாம்பூர், மேலகடம்பூர், மேல்புளியங்குடி, மோவூர், முட்டம், நகரப்பாடி, நத்தமலை, நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், ராயநல்லூர், ரெட்டியூர், சித்தமல்லி, ஷண்டன், சிறுகாட்டூர், ஸ்ரீஆதிவராகநல்லூர், ஸ்ரீபுத்தூர், ஸ்ரீநெடுஞ்சேரி, தொரப்பு, டி.அருள்மொழிதேவன், தேத்தாம்பட்டு, திருச்சின்னபுரம், வானமாதேவி, வீராணநல்லூர், வீரானந்தபுரம்.

குமராட்சி ஒன்றியம் :

(36) ஆட்கொண்டநத்தம், சி.அரசூர், ம.அரசூர், அத்திப்பட்டு, செட்டிக்கட்டளை, எடையார், எள்ளேரி, கருப்பூர், கீழஅதங்குடி, கீழபருத்திகுடி, மேலபருத்திகுடி, ம.கொளக்குடி, குமராட்சி, கூடுவெளிச்சாவடி, மாதர்சூடாமணி, மெய்யாத்தூர், முள்ளங்குடி, நலன்புத்தூர், நந்திமங்கலம், நெடும்பூர், நெய்வாசல், ம.உடையூர், பரிவளாகம், ம.புளியங்குடி, டி.புத்தூர், ருத்திரச்சோலை, சர்வராஜன்பேட்டை, சோழக்கூர், சிறகிழந்தநல்லூர், தெம்மூர், தெற்குமாங்குடி, வடக்குமாங்குடி, திருநாரையூர், வடமூர், வெள்ளூர், வெண்ணையூர்.

வாக்காளர்கள் : ஆண் பெண் மொத்தம் 93,009 86,624 1,79,633

வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 216
தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண் :
கடலூர் உதவி ஆணையர் (கலால்) சி.வி.கேசவமூர்த்தி
98424 05631