Friday, December 3, 2010


வேண்டாம் விபரீத யோசனை!
றுமை ஒழிப்பைப் போலவே விவசாய வளர்ச்சியும் இந்தியாவைப் பொறுத்தவரை நிறைவேறாத நெடுங்கனவாகவே இன்றளவும் நீடிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அதற்கான பிரச்சனைகளும், தீர்வுகளும்,  ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல.

இந்த நிலையில்,  விவசாயத்தை வளர்த்தெடுக்க, நவீன வேளாண் வித்தகர்கள் (!) சிலர் அண்மையில் முன்வைத்துள்ள திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஈ ஃபார்ம் என்ற அமைப்பை நடத்திவரும் வெங்கட சுப்பிரமணியன் என்பவர் தெரிவித்திருக்கும் யோசனைகள் விபரீதமானவை என்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர்.

அப்படி அவர் முன்வைக்கும் தீர்வும், திட்டமும்தான் என்ன?

‘விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு, அவற்றை கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பை, முழுக்கத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.

இதில் தொழில்முறை இடைத்தரகர்களின் பங்கு மிக முக்கியமானது(!). 4 அல்லது 5 கிராமங்களுக்கு ஒரு நிறுவனத்தை  அவர்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும். அவற்றின் மூலம், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொள்முதல் செய்து, தனியாருக்கு நல்ல லாபத்துடன் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயத்துறை தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும்,  அரசிடம் இருந்து பறித்து தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் . எல்லாவற்றையும் அரசே செய்து கொண்டிருந்தால் அதில் லாபம் பார்க்க முடியாது…’ இப்படியாக விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கான பல புதிய உத்திகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

மருந்து, மளிகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் பல்வேறு வர்த்தகச் சங்கிலித் தொடரின் மூலமாக மக்களைச் சென்றடையும் போது, விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு மட்டும் ஏன் அது பொருந்தாது எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்பட்டு வரும் மானியங்களும், இலவச உதவிகளும், கடன் தள்ளுபடிகளும், அவர்களைச் சுயமரியாதையற்றவர்களாக மாற்றவே வழிவகுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், இது போன்ற யோசனைகள் விவசாயத்தைக் கார்ப்பரேட் மயமாக மாற்ற உதவுமே தவிர, எளிய மக்களின் வாழ்வாதாரமாக தகவமைக்க உதவாது என்கிறார்கள் மரபுசார்ந்த வேளாண் வல்லுநர்கள். இது தொடர்பாக அவர்கள் முன்வைக்கும் மேலும் சில கருத்துகள்,  இந்திய விவசாயத்தின் எதிர்காலம் குறித்த அழுத்தமான கவலைகளை நமக்குள் ஏற்படுத்துகின்றன.

“விவசாயத்தை லாபம் மிக்க தொழிலாக மாற்றவேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், சந்தைப்படுத்துவதால் மட்டுமே அது சாத்தியமில்லை. அது  மட்டுமே விவசாயத்தின் பிரச்சனையும் அல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் என்பது வெறும் வியாபாரமோ, தொழிலோ மட்டுமல்ல. நாட்டின் தற்சார்பு உள்ளிட்ட உன்னத இலக்குகளுக்குமான ஜீவாதாரத் தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும், இலவசங்களும், மானியங்களும் அவர்களின் சுயமரியாதையைப் பறிப்பதற்கல்ல. அவர்களிடமிருந்து பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் பறிக்கப்பட்டுவரும் மண்வளத்தையும், மனிதவளத்தையும் ஈடு செய்ய என்பதை உணர்ந்நு கொள்ள வேண்டும். அது ஒரு மக்கள் அரசின் மறுக்க முடியாத கடமை.

பன்னாட்டு நிறுவனங்களால் விதைகளும், உரமும் கடன் வழங்கப்பட்டு, அதனால், விவசாயிகள் விஷம் குடித்துச் சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் இந்த நவீன வேளாண்மைச் சிந்தனையாளர்கள், சொந்த மக்களைக் காப்பாற்ற அரசு வழங்கும் உதவிகளை விமர்சிப்பதன் உள்நோக்கம் நமக்குப் புரியவில்லை.

ஜனநாயக அமைப்பில் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான அனைத்தும் அரசின் வசம் இருக்க வேண்டும் என்பதே, நியாயமான நடைமுறையாக இருக்க முடியும்.
விவசாயம் என்பது அத்தியாவசியத் தேவை மட்டுமின்றி, ஆதாரத் தேவையும் கூட. அப்படி இருக்கும் போது, அதற்காக அரசு மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளை வீண் செலவாகச் சித்தரிப்பது, விபரீத விளைவுகளுக்கே வழி வகுக்கும்.

ஏழ்மையும், வறுமையும் புதராக மண்டிக்கிடக்கும் நாட்டில் விவசாயம் ஒன்றுதான் எளிய மக்களின் வாழ்வாதாரமாக எஞ்சி நிற்கிறது. அதனையும் அவர்களிடம் இருந்து பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க வேண்டும் என்ற பேராசையே, நவீன வேளாண் சிந்தனையாளர்களிடம் தெரிகிறது.

நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கப்பட்டு அதில், மண்ணுக்கேற்ற பயிர்களை விளைவிப்பதன் மூலமாகவே, விவசாயத்தை அதன் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றும் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்க முடியும்.

ஆனால், இதற்கு நேரெதிராக விளைநிலங்களை மனையிடங்களாக கூறு போட்டு, கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட்  கோமான்களின் ஆட்சிதான் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது.

எஞ்சியுள்ள நிலங்களையும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரால், பெருமுதலாளிகளுக்கு பங்கு போட்டுத் தரும் கைங்கர்யமும் ஜரூராக நடந்தேறி வருகிறது.

இந்தநிலையில், விவசாயத்தை வளர்க்க யோசனை சொல்லுகிறோம் என்ற பெயரில், இடைத்தரகர்களின் பங்களிப்பு அவசியம் என்பது போன்ற விபரீத திட்டங்களை முன்வைப்பது ஆபத்தானது.

அரசு கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, தானியங்களைப் பதனிட்டு பாதுகாக்கும் வசதியும் விவசாயிகளுக்கு செய்துதரப்பட வேண்டும் என்பதே எமது முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

விசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முழு உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இடைத்தரகர்கள் வந்து ஆளுமை செலுத்துவதற்கு, இது பங்குச் சந்தையைப் போல வர்த்தகப் பரிவர்த்தனை மையம் அல்ல.

ஆழிப்பேரலையால் பேரழிவு நேர்ந்த போது இந்தியப் பங்குச் சந்தை வரலாறுகாணாத வகையில் ஏற்றம் கண்டதாகச் சொல்வார்கள்.

அழிவில் ஏற்றம் காணுவதற்கு விவசாயம் ஒன்றும் பங்குச்சந்தை இல்லை. அது ஆக்கத்தில் மட்டுமே ஏற்றம் காணக்கூடிய நேரிய தொழில். விவசாயத்தை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளிடம் தான் கேட்க வேண்டும். தரகர்களிடம் அல்ல ”

விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்து, அத்துறையின் எதிர்காலம் சார்ந்த பல முக்கியக் கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.
எந்த ஒரு தொழிலும் நவீனத்தன்மைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளாத போது, அதன் இருத்தலும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதே இயற்கையின் நியதி. விவசாயத்துக்கும் அது பொருந்தும் என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும், மற்ற தொழிலுக்கும், விவசாயத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. மற்றவற்றுக்குப் பொருந்தும் பொருளாதாரப் புள்ளிக் கணக்குள் இதற்குப் பொருந்தாது.  

விவசாயம் என்பது வெறும் பொருளாதார மேம்பாடு சார்ந்த துறை மட்டும் அல்ல…

எளியமக்களின் தவிர்க்க முடியாத வாழ்வாதாரம்…

நாட்டின் தற்சார்புத் தன்மையைத் தன் உயிரைக் கொடுத்துப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் மூலாதாரம்…

மண்ணையும், மண்சார்ந்த விதை உள்ளிட்ட மரபு உரிமைகளையும் காக்க வேண்டிய தார்மீக ஆதாரம்….

என அடிப்படையான அனைத்து ஆதாரங்களுக்கும் உயிராதாரமாக விளங்குவதுதான்  விவசாயம் என்பதை நவீன வேளாண் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மேனா.உலகநாதன்

நன்றி : 05.12.10 தினமலர் செய்திமலர் .

Saturday, November 20, 2010

புதிய பதிவு....



ஒளிர்ந்தும் ஒளிராத….

அன்று தீபாவளிப் பண்டிகை.
நாடு முழவதும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த கொண்டாட்ட ஒளிவெள்ளத்தின் சிறு கீற்று கூட அங்கு கூடியிருந்தவர்களின் முகத்தில் விழவில்லை.

வறுமையின் இறுக்கமும், பசியின் தீவிரமும், கனத்த போர்வையைப் போல இருளின் வடிவில் அவர்கள் மீது ஒரு சேரக் கவிந்து படர்ந்திருந்தது. 

ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக் கூலியை 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்தி, தீபாவளிக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்து, ஜெய்ப்பூர் நகரின் ஓர் இடத்தில் கூடியிருந்த ராஜஸ்தான் மாநில விவசாயத் தொழிலாளர்கள் தான் அவர்கள்.

அக்டோபர் 2ம் தேதி முதல் கடந்த 17ம் தேதிவரை ஏறத்தாழ 47 நாட்கள், அவர்கள் நடத்திய இந்தத் தொடர் போராட்டத்திற்கு,  இறுதியில் வெற்றியே கிடைத்துள்ளது.  

விவசாயத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால், பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்த அம்மாநில அரசு, அவர்களது கோரிக்கையை ஏற்று, கூலியை உயர்த்தித் தர ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அரசுதரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், கையெழுத்திட்டனர்.

‘விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றி, நாடு முழுவதும் ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலைபார்த்துவரும் தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கக் கூடியது என, போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய சமூக சேவகர் அருணாராய் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் அருந்ததிராய், பிரபல பத்திரிகையாளர் சாய்நாத், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட மேலும் பல சமூக ஆர்வலர்களும் கூட, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு, கூலியை உயரத்தித் தர நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய ஆலோசனைக் குழுத் தலைவர் என்ற முறையில், சோனியாகாந்தியே (!) பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதுதான் இதில், உச்சக்கட்ட சுவராசியம்.

எப்படியோ… அடித்தட்டு மக்களின் குரல் உயர் மட்டத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழுந்தது வரை மகிழ்ச்சி…

இதன் மூலம், மேலும் பல மாநிலங்களில் ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான குறைந்த பட்சக்கூலி, 100 ரூபாயில் இருந்து மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.  

ஆனால், ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் குறித்து, நடைமுறையில் வேறு சில கேள்விகளும் எழுந்து வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம் காரணமாக, விவசாய காலங்களில் வேலைக்குத் தொழிலளார்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவிவசாயிகள் ஒரு முணுமுணுக்கத் தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், சிறு விவசாயிகள் எழுப்பும் இந்தப் புகார் அர்த்தமற்றது என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே. பாலகிருஷ்ணன்.

ண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பெரும்பாலும் பெண்களும், வயதானவர்களும் மட்டுமே வேலை பார்த்து வருகிறார்கள். ஆண்டுக்கு 100 நாள் மட்டுமே கிடைக்கும் வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்திச் செல்ல முடியாது என்பதே யதார்த்தம். அதனால் இந்த வேலைக்கு பெரும்பாலும் குடும்பத் தலைவர்களாக இருக்கும் ஆண்கள் வருவதில்லை. அவர்கள் பிழைப்புத் தேடி வெளியூர் சென்று விடுகிறார்கள். வறுமையை எதிர்த்துப் போராடிக் கொண்டு வீட்டில் இருக்கும் பெண்கள்தான் இந்தத் திட்டத்தின் கீழ் நடைபெறும் வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

எனவே ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நலிவு என்பது ஒட்டுமொத்தமான ஒரு சமூகப் பிரச்சனை. சிறு விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து, நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறும் போது, தொழிலாளர்கள் மட்டும் அங்கு எப்படிப் பிழைப்பார்கள். 

அவர்களுக்கும் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா? விவசாயத்தை இன்று தொழிலாக மதிக்கும் இளைஞர்கள் எத்தனை பேர்? பெற்றோர்களும் தான் எத்தனை பேர்?

எல்லோரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். எளிய விவசாயிகளுக்கு விவசாயம் ஒரு நம்பிக்கை தரக்கூடிய தொழிலாக இன்று இல்லை என்ற யதார்த்தத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அது ஓர் அடிப்படையான பிரச்சனை.

மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை மேம்படுத்த முறையான கொள்கைத் திட்டங்களை வகுக்கவில்லை. மற்ற துறைகளைப் போல், சூழலுக்கு ஏற்ற லாபத்தைத் தரக்கூடிய தொழிலாக விவசாயம் வளரும்போது, இந்தப் பிரச்சனைகள் தாமாகக் காணாமல் போய்விடும். 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைக்கு, சந்தையில் உரிய விலை கிடைக்கவில்லை. அது கிடைக்கும் போதுதான்,  ஆண்டு முழுமைக்கும் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையான குறைந்த பட்சவருவாயைத் தரக்கூடிய தொழிலாகவாவது விவசாயம் வளர்ச்சி பெறும். இந்திய விவசாயம் அந்தத் திசையில் கூட இன்னும் காலடி எடுத்து வைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, ஆண்டுக்கு 100 நாள் வேலையும் ஏதோ கொஞ்சம் கூலியும் கொடுத்து விட்டு, விவசாய வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று, இந்தப் பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளம் காட்டுகிறார் பாலகிருஷ்ணன்.

கடந்த 2000 முதல் 2008  வரையிலான எட்டு ஆண்டுகளில் மட்டும், இந்திய அரசின் மொத்த வருவாயில் 5லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய், ஊழல் மூலம் சுரண்டப் பட்டு இருப்பதாக சர்வதேச பொருளாதார ஒருங்கிணைந்த அமைப்பின் (Global Financial Integrity) ஆய்வு அண்மையில் தெரிவித்துள்ளது.

ஆனால், அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறக்கும் அப்பாவி ஏழைகளுக்கு, உணவுக் கிடங்குகளில்  அழுகி வீணாகும் உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கவும், அன்றாடக் கூலிகளை உயர்த்தித் தரவும் மறுப்பதற்கான காரணங்களை மத்திய அரசு தேடிக் கண்டுபிடிக்கிறது.

இந்த அணுகுமுறை முரண்பாடுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூல காரணமாகிறது.

மற்றொரு பக்கம், சமூகத்தில் சிலர் மட்டும் அனைத்து வசதிகளும் பெற்று வாழ, பலர் குறைந்த பட்சத் தேவைக்கான கூலிக்கே போராடிக் கொண்டிருப்பது எந்த வகையான வளர்ச்சி என்ற கேள்வியும் எழுகிறது.

ஆண்டுக்கு 100 நாட்கள் வேலையும், அதற்கான கூலியும் அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆகலாம். அவர்களது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்பதே உண்மை.

வறுமை ஒழிப்பு என்ற முழக்கம் அதன் அர்தத்தை  வேகமாக இழந்து வருகிறது. வளத்தைப் பரவலாக்குவது என்பதே இனிச் சரியான முழக்கமாகவும், இலக்காகவும் இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்

நன்றி  : 21. 11. 2010, செய்திமலர் – தினமலர் (நெல்லைப் பதிப்பு)

Sunday, November 14, 2010



ப.சிதம்பரத்தின் ‘பயங்கர’ நினைவாற்றல்!

‘என் நினைவு கூறுவதில் இருந்து, 2010ம் ஆண்டில் தமிழக மீனவர் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை’

கடந்த வாரம் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன இந்த வார்த்தைகள், ஏற்கனவே வெந்து நொந்து போயிருக்கும் தமிழக மீனவர்களின் மனப்புண்ணில் வேலைப் பாய்ச்சி வேதனைப்படுத்துவது போல் ஆகிவிட்டது.
ப.சிதம்பரம் பட்டும் படாமல் சொன்ன அந்த சொற்கள், தமிழக மீனவர்கள் மத்தியில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளன.

 ‘அவர் மத்திய அமைச்சராக இருக்கலாம். ஆனால் அவர் பிறந்தது தமிழ் நாட்டில் தானே. அந்த அடிப்படையிலாவது அவர் தமிழக மீனவர்களின் பிரச்சனையில் கருணையும், கரிசனமும் காட்டக்கூடாதா? இலங்கைக் கடற்படையினரிடம் அடியும், உதையும் பட்டு, உடமைகளை இழந்து, ரத்தக் காயத்துடன் உயிர் பிழைத்தால் போதும் என அன்றாடம் கரைக்கு வந்து சேரும் தமிழக மீனவர்களின் கண்ணீரும், கதறலும் அவர் காதுகளில் விழவே இல்லையா? அவர் நினைவு ஏன் இத்தனை பெரிய பொய்யைக் கூறுகிறது’ என்ற அவர்களது குமுறலில் நியாயம் இருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுநாள் வரை மட்டும், தமிழக மீனவர்கள் மீது 42 முறை இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறுகின்றனர் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 தமிழக மீனவர்களின் கை முறிந்துள்ளது.
ஜூலை மாதம் 7ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 படகுகள் தகர்க்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக மீனவர்களின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

அதே மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 நாட்டுப் படகுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், மீனவர்களின் மண்டை உடைக்கப்பட்டு, கை முறிந்துள்ளது.

செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு படகுகள் சேதமடைந்துள்ளன.

ஆகஸ்ட் மாதம் தமிழக மீனவர்களின் ஒரு படகே மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று,  2010ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, கண்ணுக்குத் தெரிந்து 42 முறை தாக்குதல் நடந்திருக்கும் போது, ஒரு மத்திய உள்துறை அமைச்சர், அதுவும் தமிழர்,  இப்படி அலட்சியமாகப் பேசியிருப்பது என்ன நியாயம் என, அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கு ப.சிதம்பரம் என்ன பதில் சொல்லுவார்.

‘நான் தமிழன் என்பதற்காக தமிழக மீனவர்களைப் பற்றி மட்டுமே கவலைப் பட்டுக்கொண்டிருக்க முடியுமா? இந்தியா முழுமைக்கும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு ஆயிரம் தலைவலி இருக்கிறது. இலங்கையோடு, இந்தியாவின் உறவைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இல்லாவிட்டால் சீனாவின் ஆக்கிரமிப்பு அங்கு அதிகமாகிவிடும். டெல்லிக்கு வந்த ராஜபக்சேவுக்கு விருந்து வைத்து,  அவருக்கு இன்னும் என்னென்ன தேவையோ அவ்வளவு உதவிகளையும் செய்ய நாங்கள் சித்தமாக இருப்பதாக தாஜா செய்து அனுப்பி இருக்கிறோம். அவரிடம் போய், எங்கள் மீனவர்களை உங்கள் கடற்படையினர் அவ்வப்போது தாக்கிக் கொன்று வருகிறார்கள். அதை நிறுத்துங்கள் என்று சொன்னால், அவர் சீனாவின் பக்கம் சாயக்கூடும். பின்னர் எங்கள் ராஜதந்திரம் என்னாவது? இந்தியாவின் பாதுகாப்பு முக்கியமா, இங்குள்ள சில மீனவர்கள் முக்கியமா?’ என்று மகாப்பெரிய பிரச்சனைகளை அவர் பதிலுக்கு முன்வைக்கக் கூடும்.

இத்தனை பெரிய பிரச்சனைகளைக் கையாண்டு கொண்டிருக்கும் ப.சிதம்பரத்திறகு, எங்கோ இருக்கும் தமிழக மீனவர்கள் என்ற சிறு கூட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து நினைவிருக்கும் என எதிர்பார்க்க முடியுமா?

அவரைப் பொறுத்தவரை புள்ளி விவரம் சரியாக இருக்கிறது. அரசின் ஆவணம் சொல்லும் தகவலின் படி, 2010ம் ஆண்டில் ஒரே ஒரு மீனவர் மட்டும்தான் கொல்லப்பட்டிருக்கிறார்.

அந்தப் புள்ளிவிவரத்தில், அன்றாடம் கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர், கண்மூடித்தனமாகத் தாக்குவதோ, நிர்வாணப்படுத்தி ஐஸ் கட்டிகளின் மீது படுக்க வைத்துச் சித்தரவதைப் படுத்துவதோ, படகுகள் சேதப்படுத்தப்படுவதோ, மீன்படி சாதனங்கள் பறிக்கப்படுவதோ இடம்பெறவில்லை.

அப்படி இருக்கும் போது இந்தப் பிரச்சனை பற்றி எல்லாம் அவர் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும். அதுதான் அவரது நினைவாற்றல், நிர்த்தாட்சண்யமாக இந்தப் பிரச்சனைகளை எல்லாம் மறந்து விட்டது. ஆக, இது நினைவாற்றல் செய்த குற்றமே தவிர, சிதம்பரத்தின் குற்றமல்ல.

‘மத்திய அரசைப் பொறுத்தவரை நாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் தான். எங்களது பிரச்சனைகளும்ம் அவர்களுக்கு இரண்டாம் பட்சமானவைதான். இது போன்ற தாக்குதலின் போது இலங்கை மீனவர்களுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் ஒரு வேளை, மத்திய அரசு பதறக் கூடும்’ என்கிறார்கள் தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள்.

மத்திய அரசின் மீது, தமிழக மீனவர்கள் கொண்டுள்ள இந்தக் கோபத்திற்கு நிறையவே காரணம் இருக்கிறது.

தமிழ மீனவர்களைப் போலவே, இலங்கை மீனவர்களும் எல்லை மீறி வந்து மீன்பிடிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான்.
ஆனால், அவர்களை இந்தியக் கடற்படையினர் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை. எச்சரிக்கை, அல்லது கைது என்ற அளவில் மட்டுமே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

காரணம், இலங்கை மீனவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என, மத்திய அரசு, இந்தியக் கடற்படைக்கு அறிவுறுத்தி இருப்பதுதான்.
ஆனால், கச்சத்தீவுப் பகுதியிலும், அதனைத் தாண்டியும் சென்று மீன்பிடிக்கும், தமிழக மீனவர்களிடம், இலங்கைக் கடற்படையினர் எந்தக் கருணையும் காட்டுவதில்லை.

இலங்கை மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்படையை அறிவுறுத்தும் மத்திய அரசு, தமிழ மீனவர்களைப் பாதுகாக்க, இலங்கை அரசை வலியுறுத்தாதது ஏன் என்பதுதான், அவர்கள் எழுப்பும் கேள்வி.

இலங்கையில் கொல்லப்பட்டது போக எஞ்சியுள்ள தமிழர்களுக்காக ‘நீலி’க் கண்ணீர் வடித்து, பல ஆயிரம் கோடிகளைச் செலவிடத் தயாராக உள்ள மத்திய அரசு, தமிழக மீனவர்களின் உயிரை மட்டும் இப்படி, இலங்கைக் கடற்படைக்குத் தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம்?
ப.சிதம்பரம் போன்றவர்களின் நினைவாற்றல் இதற்குப் பதிலளிக்க மறுக்கலாம். மனச்சாட்சி?

மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர் 14.11.11 (நெல்லைப் பதிப்பு)