Saturday, January 1, 2011

கட்டுரை


(2.1.11 தினமலர் - செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது)

 ஏறுவது விலை மட்டுமல்ல !


டந்த வாரம் முழுவதும், வெங்காயமும், தக்காளியும் அகில இந்திய அளவில் ஊடகங்களின் முக்கியப் பாடுபொருளானது.

அவற்றின் கற்பனைக்கெட்டாத  விலை உயர்வு, நாட்டின் அடித்தட்டு மக்கள் முதல், ஆளுவோர் வரை அனைவரையும், ஒரு பூகம்பத்தைப் போல நடுங்க வைத்துவிட்டது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரமுகர் இப்படிச் சொல்கிறார்…

“முன்பெல்லாம் வீட்டு மனை பற்றிப் பேசும்போது செண்ட் கணக்கில் பேசுவார்கள். இப்போது சதுர அடிக்கணக்கில் தான் கூற முடிகிறது. அது போலவே கத்திரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை இனி கடையில் சென்று கிலோ கணக்கில் கேட்கவோ வாங்கவோ முடியாது. 100 மிலி கிராம், 50 மிலி கிராம் என்ற அளவில் மட்டும் தான் கேட்க முடியும் போல….”
அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த சாமான்யர்களின் பேரதிர்ச்சியையே அவரது இந்தக் கருத்து பிரதிபலிக்கிறது. 

வெங்காயத்தின் விலை உயர்வை ஒட்டி எழுந்த எதிர்ப்பைப் பார்த்து மிரண்டு போன மத்திய அரசு, இறக்குமதிக்கான வரியை முழுமையாக ரத்து செய்து, ஏற்றுமதிக்குத் தடைவிதித்து… பல்வேறு பகீரதக் குட்டிக்கரணங்களைப் போட்டு, ஓரளவுக்கு விலையைக் கட்டுப்படுத்தியது.
ஆனாலும், விலையைத் தரைமட்டத்திற்கு குறைத்து விட முடியவில்லை.

மழையால் பாதிப்பு, இறக்குமதி குறைந்தது… என விலை உயர்வுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அவையெல்லாம் முழுமையான காரணங்கள் அல்ல என்பது மக்களுக்கும் தெரியும். அவர்களின் பிரதிநிதிகளுக்கும் தெரியும்.

விலை உயர்வு என்பது,  வாக்குவங்கியைப் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பதால், அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் பதற்றம் காட்டுகின்றன. இல்லாவிட்டால் இது பற்றியெல்லாம் அவர்கள் பெரிதாக கண்டு கொள்ளப்போகிறார்களா என்ன?

எப்படியோ, விலை உயர்வுப் பிரச்சனையை, நாடு தழுவிய விவாதப் பொருளாக மாற்றியதற்காக, வெங்காயத்திற்கும், தக்காளிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

சரி.

காய்கறிகளின் விலை இந்த அளவு உயரும்போது, அதனால் விவசாயிகளுக்கு ஏதாவது லாபம் கிடைக்கிறதா? அவர்களது வாழ்க்கைத் தரத்தில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?

இல்லவே இல்லை என்கிறது அண்மையில் வெளிவந்துள்ள தேசிய குற்ற பதிவு அமைப்பின் (National Crime Records Burea – NCRB) புள்ளி விவரம்.
கடந்த 2009ம் ஆண்டில் மட்டும் 17 ஆயிரத்து 368 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக, அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வழக்கம் போல, மகாராஷ்டிரா மாநிலம் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மாநிலம் என்ற ‘பெருமை(?)யை’த் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு, அந்த மாநிலத்தில் மட்டும் 2 ஆயிரத்து 872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகம் உள்ள ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் கடந்த ஆண்டு, 10 ஆயிரத்து 765 விவசாயிகள் தற்கொலையால் மடிந்துள்ளனர். இது அந்த ஆண்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 62 சதவீதம் ஆகும் என தேசிய குற்றப்பதிவு அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது. 
அதற்காக தமிழகத்தின் நிலவரமும் ஆறுதல் தரக்கூடியதாக இல்லை. கடந்த 2008ம் ஆண்டு 512 ஆக இருந்த தமிழக விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009ம் ஆண்டில் 1060 ஆக, அதாவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்திய அளவில், கடந்த 1997ம் ஆண்டு தொடங்கி, 2009ம் ஆண்டு முடிய 12 ஆண்டுகளில் 2 லட்சத்து 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தேசிய குற்றப்பதிவு அமைப்பு தெரிவிக்கிறது.
அதாவது, கடந்த 2009ம் ஆண்டு நிகழ்ந்துள்ள தற்கொலை எண்ணிக்கைப் படி, 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து மடிகிறார் என மதிப்பிடப் படுகிறது.

குறிப்பிட்ட ஒரு பிரச்சனையின் அழுத்தம் காரணமாக இத்தனை பேர் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்வது, மனித வரலாற்றில் எங்கும், எப்போதும் நிகழாத ஒன்று என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
இந்திய விவசாயத்தின் வளர்ச்சி, இந்த லட்சணத்தில்தான் தற்போதும் இருந்து வருகிறது.

“நாட்டில் விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அந்தத்துறையைப் பாதிக்கக் கூடிய பிரச்சனைகள் என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் உள்ளன” என்கிறார், இந்திய விவசாயிகள் தற்கொலை குறித்து விரிவான ஆய்வுகளை நடத்தி முடித்துள்ள பொருளாதார வல்லுநர் கே. நாகராஜ்.

உண்மைதானே! ஒரு பக்கம் காய்கறிகளின் விலை உயர்கிறது. அதே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி என்றால் விலை உயர்வால் லாபம் அடைபவர்கள் யார்? பொருட்களுக்கான விலையைத் தீர்மானிப்பவர்கள் யார்? 

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைத்தால், அவன் குறைந்த பட்சம் தற்கொலை செய்து கொள்ளாமல் உயிரோடு இருந்து, அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்கவாவது பயன்படுவான் தானே? அதற்காகவாவது இந்தப் பிரச்சனையின் உண்மையான மூல வேரைக் கண்டு பிடித்து அறுத்தெறிய அரசியல் கட்சிகள் முயலலாமே?

இன்று வரை குக்கிராமங்களில் விளையும் தோட்டக் காய்கறிகளை, வியாபாரிகள் அதிகவிலை கொடுத்து வாங்குவதில்லை. அதே காயை அருகில் உள்ள சிறு நகரக்கடையில் போய், அதே விவசாயி வாங்க நேரிட்டால், பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.
களைய முடியாத இந்த முரண்பாட்டுக் களை எப்படி மண்டியது? இதன் மூல வேர் எங்கிருந்துதான் புறப்படுகிறது?

இந்திய மக்கள் தொகையில் 70க்கும் மேற்பட்ட சதவீத்தினராக இருந்து வரும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இன்று வரை விடைகிடைக்காத கேள்வி இதுதான்.

உள்ளூர் வியாபாரிகளின் பதுக்கலுடன், வெளிநாட்டு நிறுவனங்களின் பகடையாட்டமும் இப்போது சேர்ந்து கொண்டதால், விலை உயர்வு என்பது பரம்பத ஆட்டம் போல் தொடர்கிறது.

இந்தியாவின் விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளில் மாற்றத்தை மேற்கொள்வதற்கு, தெற்காசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் செய்து கொண்டுள்ள தாராள மய வணிக ஒப்பந்தம் (Free Trde Agreement) பெரும் தடையாக இருப்பதாக, பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதனால் அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதும், அவசியமான பொருட்களை ஏற்றுமதி செய்வது மான முரண்பாடான நடைமுறை, மத்திய அரசால் தொடர்ந்து கடைப்பிடிக்கப் பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ரோம் நகரமே பற்றி எரியும் போது, அமைதியாக பிடில் வாசித்துக் கொண்டிருந்த அந்நாட்டு மன்னனை, பல முறை நினைவுபடுத்தும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் முரண்பட்ட பேச்சுக்கும் போக்குக்குகம் வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

வரி ரத்து, ஏற்றுமதிக்கு தற்காலிகத் தடை என்ற விலைக்குறைப்பு நாடகமெல்லாம், தேர்தலுக்கு வேண்டுமானால் பயன்படலாம். விவசாயத்தையும், விவசாயிகளையும் தேரவைக்கப்ப பயன்படாது.

காலத்துக்கு ஏற்ற உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் புதிய விவசாயக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அவை விவசாயத்தையும், விவசாயிகளையும் முன்னிறுத்தி, அவர்களுக்கு குறைந்த பட்ச உத்தராதங்களை அளிக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும்.

விலை உயர்வு என்ற வலிக்கு, வெறும் தற்காலிக நிவாரணி மாத்திரைகள் தேவையில்லை. அதன் அடிப்படையான ஆணிவேரைக் கண்டு அறுத்தெறியும் ரண சிகிச்சை தேவை. அதற்கு விவசாயத்தை வளப்படுத்தி, பலப்படுத்துவது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.

மேனா.உலகநாதன்

Monday, December 27, 2010

26.12.10, தினமலர் செய்திமலர் நெல்லைப் பதிப்பில் வெளிவந்தது 

படித்தவர்கள்தான் செய்கிறார்கள்…!

“படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால்
போவான் போவான் ஐயோ என்று போவான்”

பசியும், பட்டினியுமாகச் செத்துப்போன மகாகவி பாரதியின் அழுத்தமான நம்பிக்கை இது.

இப்போது இந்த வரிகளுக்கு எந்த அளவு அர்த்தப் பொலிவு இருக்கிறது என்று தெரியவில்லை.

படிக்காதவன், ஓடும் பேருந்தில் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறான். பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறான்.

அவனுடைய திருட்டின் எல்லை அவ்வளவுதான்.

படித்தவர்களும், பெரும் பதவியில் இருப்பவர்களும் செய்யும் திருட்டுகள் கற்பனைக்கு எட்டாதவையாக இருக்கின்றன.

சமூகத்தின் பெரும்பாலான சீரழிவுகளுக்கும் மெத்தப்படித்த மேல்தட்டினரே காரணமாக இருக்கிறார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2001ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, தமிழகத்தின் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற பின் தங்கிய பகுதிகளில், 1000 ஆண்குழந்தைகளுக்கு சராசரியாக 925 முதல் 850 பெண்குழந்தைகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக, பெண் சிசுக்கொலைக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அமைப்பு (Campain Against Sex selective Abortion) தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த அமைப்பின் கருத்தரங்கில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அந்தக் கருத்தரங்கில், பெண் சிசுக்கொலை  தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தப் பிரச்சனை தொடர்பாக கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மாற்றங்கள் குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

6 வயதுக்கு உட்பட்ட ஆயிரம் ஆண் பெண் குழுந்தைகளின் பாலின சதவீதம், பெருநகரங்களை விட, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் மேம்பாடு அடைந்துள்ளதாக, இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத் தலைவர் ஷீலாராணி சுங்கத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டில், பாலின விகிதத்தில்  மிக மோசமாகக் காணப்பட்ட தர்மபுரி, சேலம், மதுரை, கடலூர் மாவட்டங்களில், தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்தில் 1000 ஆண்குழந்தைகளுக்கு, 976 பெண்குழந்தைகள் என்ற அளவில் தற்போது பாலின விகிதம் மேம்பட்டிருப்பதையும், அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆனால், கல்வி அறிவில் தன்னிறைவு பெற்றதாக கருதப்படும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளம், வயநாடு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் முன்னேறிய நகரமாக கருதப்படும் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் பாலின விகிதம், படுவேகமாக சரிந்து கொண்டிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

கல்வி அறிவில் முன்னேறாத மாநிலங்களைக் காட்டிலும், முன்னேறிய மாநிலங்களில், சிசுவிலேயே பாலினத்தை அறிந்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

இதற்குக் காரணம் நகரங்கள், மற்றும் சிறு நகரங்களில் சட்ட விரோதமாக கருச்சிதைவு செய்யும் ஸ்கேன் மையங்கள் நிறைய இருப்பதே காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் மூன்றில் ஒரு பங்கு மையங்கள் மட்டுமே, எத்தனை கருச்சிதைவு செய்யப்பட்டது என்பது குறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருப்பதாக, சமூக ஆர்வலர் ரஞ்சனி மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கருவுற்று 12 வாரங்களுக்குப் பின்னர் கருச்சிதைவு செய்ய வேண்டும் என்றால், சட்டப்படி அதற்கான உரிமம் பெற்ற அரசு மருத்துவமனைகளை மட்டுமே அணுக வேண்டும் என்ற நிலையிலும், பெரும்பாலும் யாரும் அதனைப் பின்பற்றுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மிகவும் தாழ்த்தப்பட்ட ஏழை எளிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை விட, நடுத்தர மற்றும் மேல்தட்டு குடும்பங்களில்தான் வரதட்சணை என்பது, இன்றும் பெரிய அளவில் கோலோச்சி வருவதாக, இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாலான சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய குடும்பங்களில் பெண்ணுக்குத் திருமணம் செய்வது செலவு மிகுந்த ஆட்பரச் சடங்காகவே  உருவெடுத்திருப்பது, பெண் குழந்தைகள் குறித்த உள்ளார்ந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் தொழில் நுட்பத்தை, எளிய மக்களைவிட, படித்த மேல்தட்டு சமூகத்தினரே அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும், அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
உண்மைதானே!

பெரும்பாலான மலைக் கிராமங்களில், பிரசவ நேரத்தில் பெண்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லக்கூட சாலை வசதியோ, வாகன வசதியோ இல்லாத நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிய அவர்கள் எங்கே போவார்கள்?

படித்தறிந்த மேல் தட்டினர், மிக இயல்பாக, எந்தச் சங்கடமும் இன்றி, நெல்மணியோ, கள்ளிப்பாலோ இல்லாமல் பெண் சிசுவைக் கருவிலேயே கண்டறிந்து ஒழித்து வருகின்றனர் என்ற உண்மை, நமக்கு அதிர்ச்சியை விட வேதனையையே அதிகம் தருகிறது.

வரதட்சணை என்ற மோசமான கலாச்சார நோயே, இன்றுவரை பெண்சிசுக் கொலைக்கு ஆதார வேராக இருந்து வருகிறது என்ற உண்மை தற்போது மேலும் உறுதிப்பட்டு வருகிறது.

வடிவங்கள் மாறலாம். ஆனால் வரதட்சணை என்ற வக்கிரம் மாறவில்லை. படித்தவர்களும் கூட சிசுவென்றும் பாராமல், பெண்ணைக் கருவிலேயே கண்டறிந்து கொல்லும் மூர்க்கம், இன்றும் தணியாததற்கு இதுவே காரணமாக உள்ளது.

நுனிநாக்கு ஆங்கிலமும், நவநாகரிக உடையுமாக தோற்றத்தில் மட்டுமே தங்களைப் புதுமை விரும்பிகளாய்க் காட்டிக் கொண்டு அலையும் இவர்கள், சிந்தனை அளவில், பெண்கள் குறித்த பார்வையில், பல ஆயிரம் ஆண்டு பின்தங்கிய பழமைவாதிகள் என்பதே உண்மை.

இவர்களோடு ஒப்பிடும் போது, ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமிதம் பொங்க கேள்வி எழுப்பிய வள்ளுவன் இன்றும் நமக்குப் புதியவனாகத் தெரிவதில் வியப்பில்லை!

பாவம் பாரதி. படித்தவர்கள் மீதுதான் அவனுக்கு எத்தனை நம்பிக்கை.

மேனா.உலகநாதன்

Tuesday, December 21, 2010

கட்டுரை


ஜனநாயகத்தின் சண்டாளர்கள்!

லைவரிசை ஒதுக்கீட்டுப் புகாரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளை, வட இந்திய ஊடகங்கள், ஆங்கிலமா ஹிந்தியா என அடையாளம் கண்டறிய முடியாத வினோதமொழியில்,   விலாவாரியாகக் கடைவிரித்துக் கொண்டிருந்தன.

அந்த ஜனநாயக சங்கடத்தைப் பார்த்த படியே நாளேட்டைப் புரட்டிய போது கண்ணில் பட்ட மற்றொரு செய்தி, அத்தகைய சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதையை முதலமைச்சரே இழைத்த கொடுமை குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் தொடர்பான செய்திதான் அது.

விதார்பா மாவட்டத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 1997 முதல், 2008ம் ஆண்டு முடிய சுமார் பத்து ஆண்டுகளில், அந்த மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த  2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

மனித வரலாற்றிலேயே, குறிப்பிட்ட ஒரு பிரச்சனை தந்த அழுத்தத்தால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்ததில்லை என்பது, மானுடவியாலாளர்களின் கருத்து.

இத்தகைய வரலாற்றுக் கொடூரத்துக்கு ஆளான அந்த அப்பாவி விவசாயிகள் பலரின் தற்கொலைக்குக் காரணமாக, அந்த மாநிலத்தின் அப்போதைய முதமைச்சரே இருந்துள்ளார் என்பதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.
அவர் வேறு யாருமல்ல. தற்போது மத்திய அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விலாஸ்வராவ் தேஷ்முக்தான்!

அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்?  

மகாராஷ்டிர மாநிலத்தின் அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ திலீப்குமார் சனந்தா என்பவரும், அவரது குடும்பத்தினரும், விதார்பா மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளனர்.
குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10 சதவீதம் வட்டி என்றால் எந்த விவசாயியால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?

மானத்தைப் பெரிதாக கருதும் விவசாயிகள், அதனை விட முடியாமல் உயிரை விடும் அவலம், அம்மாவட்டத்தில் தொடர்கதையானது.

இந்தக் கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாகப் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அந்தப் புகார்கள் மீது, அம்மாநிலக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதததுடன், வழக்குப் பதிவு செய்யவும் மறுத்து விட்டது.

தங்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பதாக, மகாராஷ்டிர மாநில உயர் நீதி மன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாயிகளின் புகார் தொடர்பாக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதனைப் பதிவு செய்ய மறுத்ததற்கு அபராதமாக அரசு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதற்குப் பின்னரும் அம்மாநில அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டியதைத் தொடர்ந்து, விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், இந்தப் பிரச்சனை குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு, முதலமைச்சர் விலாஸ்வராவ் தேஷ்முக்கின் அந்தரங்க உதவியாளர், தொலை பேசி மூலம் எச்சரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி, முதலமைச்சரின் உதவியாளர், தொலை பேசி மூலமாக, மாவட்ட ஆட்சியருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு இயந்திரத்தை ஏழைகளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாகாராஷ்டிர மாநில அரசுக்கு விதித்த அபராதத் தோகையை 10 லட்சம் ரூபாயக அதிகரித்து உத்தரவிட்டதுடன், உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கும் அவர்கள் கட்டளை இட்டுள்ளனர்.

ஜனநாயக அமைப்பில், தங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்கு உட்பட்டு, அவர்களால் செய்ய முடிந்தது இவ்வளவுதான் போலும்.

பன்னாட்டு நிறுவனங்களைக் களமிறக்கி, விதைகள், உரம் என அனைத்திற்கும் விவசாயிகளைக் கையேந்த வைத்தது, மத்திய அரசு என்றால், மாநில அரசின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள், அந்த மக்களிடமே கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளனர்.

என்ன ஒரு ஜனநாயகம்?

இதில் நீ செய்த ஊழல் பெரிதா, நான் செய்த ஊழல் பெரிதா என்ற பட்டி மன்றம் வேறு.

பல லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம் அனாயசமாக அரங்கேறிக் கொண்டிருக்கையில், இது என்ன பிரமாதம் என்று சிலர் கேட்கலாம்.
அவற்றால் அரசுக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுவது வருவாய் இழப்பு மட்டும்தான்.

ஆனால், ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு, ஆட்சியில் இருப்பவர்களும், அவர்களது ஆட்களும் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்து, தற்கொலைக்குள் தள்ளி விடும் குரூரம் சகிக்க முடியாதது.

லட்சியப் பிடிப்பும், கொள்கை உறுதியும், நேர்மையும் மிகுந்த அரசியல் தலைவர்கள் இல்லாமல் போயிருக்கலாம்.

அடியாட்களுக்கும், கொலைகாரக் கூலிப்படையினருக்கும் இருக்கும், குறைந்த பட்ச மனித இரக்கம் கூடவா, அரசியல்வாதிகளிடம்  இல்லாமல் போய்விடும்?
போய்விட்டது என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ஊழலும், சுரண்டலும் அரசியலை விழுங்கும் ஆக்டோபஸ்களாக, விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை எத்தனையோ நிகழ்வுகள் மூலம் நாம் உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், அவை எல்லாவற்றையும் விட, மிக மோசமான, கொடூரமான உதாரணம் இது.

விலாஸ்வராவ் தேஷ்முக் என்பவர், இன்றைய அரசியல்வாதிகளின்  கீழ்மைத் தனத்திற்கு, வெளிப்படையான குறியீடு மட்டுமே.

மற்றபடி இது விதார்பா மாவட்டத்தில் மட்டுமே நடப்பது அல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏழ்மைக்கும், வறுமைக்கும் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டு, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையோடு, மரணத்திற்காகக் காத்திருக்கும், அப்பாவி விவசாயிகளின் நிலையும் இதுதான்.

ஜார்கண்டில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு கூலியாகக் கொடுக்கப்படும் காசோலைகளை மாற்றித்தர அவர்களிடமே சிலர் கமிஷன் வாங்குவதாக, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர்,  ரிசர்வ் வங்கிக் கவர்னர் சுப்பாராவ் முன்னிலையிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழைகள் மீது, நமது அரசுகளும் அமைப்பும் கொண்டுள்ள பரிவும், அக்கறையும் எத்தகையது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் படும் சிரமத்திற்காக (!) கண்ணீர் வடிக்கும் நமது பிரதமர், கஞ்சிக்குப் போராடும் இந்த எளியவர்கள் குறித்தும் சிறிது அக்கறை செலுத்தலாம். அதனால் பெரிய அரசியல் பிழை ஒன்றும் நேர்ந்து விடாது.


மேனா. உலகநாதன்

தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) 19.05.2010


Thursday, December 16, 2010

தொடக்கம்

முடிவின் பயணம்
தொடங்கிவிட்டது
அதன் வாலைப் பிடித்தபடியே
பின்தொடரும் எனது
வழி…

ஒற்றையடிப் பாதையாய்
குறுகலான செடிப்புதர்களாய்
மேடும் பள்ளமுமாய்
கற்களும் முற்களுமாய்
அவ்வப்போது அகன்ற
சாலையும்…

சுவடுகளைத் திரும்பிப்
பார்க்க மனமின்றி
பயணிக்கும் எனது
மூர்க்கம்
வேட்கை தணிந்து
இளைப்பாறுவது எப்போது….?

மேனா.உலகநாதன்


Saturday, December 11, 2010




மாற்றி யோசிக்கலாமே…….

‘வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடிஉயரும்
குடிஉயரக் கோனுயர்வான்’

விவசாயம் எனும் உயிர்த்தொழிலின் அவசியத்தை உணர்த்த, தமிழ் மூதாட்டி ஔவை சொல்லி வைத்த அறவுரை இது.

நவீனத்தின் பாய்ச்சலில், எத்தனையோ தொன்மங்களும், விழுமியங்களும் அர்த்தம் இழந்து வரும் நிலையில், ஔவையின் இந்த மூதுரை மட்டும், நம் மண்ணின் அறமாக இன்றும் நீடித்து வருகிறது.

என்னதான் நவீனப் பொருளாதாரப் புலிகள் அதை இல்லை என அடிக்கப்பார்த்தாலும், இந்த நாட்டின் முதல் தொழிலாகவும், முழுத்தொழிலாகவும் விவசாயமே இன்றுவரை நிலைத்து வருகிறது.
ஆனால், இயற்கையின் சுழற்சி அப்படியே நீடிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
வடமேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்கள் உரிய காலத்தில் தொடங்கி உரிய காலத்தில் முடிவது இல்லை.
  
‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என்ற விவசாயப் பெருமக்களின் வழக்கு மொழி முன்னெப்போதையும் விட, அண்மைக்காலமாக மெய்யாகி வருகிறது. 

ஆண்டு தோறும், சம்பா பருவ நடவு முடிந்து, சில தினங்களுக்குள் கனமழை பொழிவதும், பயிர்கள் பாழாவதும், அண்மைக் காலமாக தொடர்கதையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியதாக, அப்பகுதியை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை. கடும் சேதமும், பெரும் பாதிப்பும் அப்பகுதி விவசாயிகளைக் கலக்கமடைய வைத்துவிட்டது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என, தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், மழை விட்டுவைக்க வில்லை.

நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது.
 ‘முன்பெல்லாம் தான் மழை பெய்தது. ஆனால் அது இத்தனை பேரழிவுகளை ஏற்படுத்துவதில்லை’ சில கிராமத்து முதியவர்கள் வெளிப்படுத்தும் இந்த அதிர்ச்சி கலந்த வேதனையில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கிராமப் பகுதிகளில் ஒரு கட்டாயமான பழக்கம் இருந்தது. விவசாயப் பருவம் முடிவடைந்து, கோடைக்காலத்தில் விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள்.

அப்போது அந்தக் கிராமத்திற்கான நீராதரங்களுக்கு தண்ணீர் வரும் வழிகளையும், நிரம்பிய பின்னர் அதனை வெளியேற்றுவதற்கான வடிகால்களையும், தூர் வாரித் தூய்மைப் படுத்தும் பணி இயல்பாக மேற்கொள்ளப் படுவதுண்டு.

இதற்கு அரசு சார்பில் உதவியோ, உத்தரவோ எதுவும் பெறப்படுவதில்லை. வீட்டுக்கு ஒரு ஆள் என்ற முறையில், கிராமத்து பொதுமக்களே முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த நடைமுறைக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  ‘கிராம ஊழியம்’ என்றே ஒரு பெயருண்டு.

ஆனால், தற்காலத்தில் இந்த நடைமுறை முற்றிலும் கைவிடப்பட்டு விட்டது. நீர் நிலைகளின் மராமத்துப் பணிகளுக்கு முற்றிலும் அரசு நிர்வாகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனநிலைக்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

இதனால், பெரும்பாலான கிராமங்களில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் வரும் வழியும் சரி, வெளியேற்றப்படும் வழியும் சரி, புதர் மண்டியே காணப்படுகிறது.
தண்ணீர் வருவதும் சிரமம். வந்தால் வெளியேறுவதும் சிக்கல்.

இதனால் கால்வாய்களில் பெருக்கெடுக்கும் மழை நீர், ஏரிகளைச் சென்று அடைய வழி இல்லாமல், நேராக வயல்வெளிகளுக்குள் பீறிட்டுப் பாய்கிறது. ஏரியில் பெருகும் நீரோ, வெளியேற முடியாமல் கரைகள் உடைப்பெடுத்து, வயல் வெளியை மூழ்கடிக்கிறது.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட மேலும் சில தலைவர்கள், அடிப்படையான இந்தப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நீர்நிலைகள் தூர்வாரப்படாததுடன், அவற்றுக்கான நீர்வரத்து மற்றும் போக்கு வழிகளும் பாழடைந்து கிடப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நிவாரணப் பணிகளில் ஒன்றாக, நீர்நிலைகளையும், அவற்றின் நீர் வரத்து மற்றும் போக்குக்கான வழிகளையும் சீரமைப்பதில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 39 ஆயிரம் நீர் நிலைகள் இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்பட்டு விட்டதை,  சில ஆண்டுகளுக்கு முன்னரே சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

எஞ்சி இருக்கும் நீர் நிலைகளையேனும் உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, பொதுமக்களின் கடமையும் கூட.
மழை வெள்ளப் பாதிப்பு குறித்த ஆய்வுப்பணியில், நீர் நிலைகள் குறித்த இந்த கணக்கெடுப்பையும் அரசு சேர்த்துச் செய்தால், அடுத்த மழைக்காலத்திலாவது, வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவேனும் தப்ப முடியும்.

இது ஒரு புறம் இருக்க, கால மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள இதுவரை நாம் என்ன வியூகம் வகுத்திருக்கிறோம்?
பனி, மழை, வெயில் என இயற்கையின் பருவமாற்றங்கள் அனைத்தும் அளவுக்கு மீறிய உக்கிரத்துடன், பூமிப்பந்தைத் தாக்கத் தொடங்கி உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொட்டித் தீர்க்கும் கொடும் பனியும், கீழை நாடுகளில் பெய்து தீர்க்கும் பேய் மழையும் இதனை ஆண்டுதோறும் நமக்கு உணர்த்தி வருகின்றன.

மற்ற நாடுகளைக் காட்டிலும், மண்ணையும், மழையையும் சார்ந்திருக்கும் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட நாம்,  இது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற நமது முன்னோர்களின் பழ மொழியை, வேளாண் தொழிலுக்கான அடிப்படை விதியாக இனியும் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆடி மாதம் நாற்றுப் பாவி, ஆவணியில் நடவு செய்த சில தினங்களுக்குள்ளேயே பெருமழை பெய்து பயிரை மூழ்கடித்து விடுகிறது.

இல்லாவிட்டால், நெற்பயிர் முற்றி, அறுவடைக்கு தயாரக உள்ள நேரத்தில் பெய்து, விளைந்த பயிரை நாசம் செய்து விடுகிறது.

இப்படிக் காலம் தவறிப்பெய்யும் மழைக்குத் தகுந்தவாறு நமது விவசாய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது குறித்து, வேளாண் வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்து, விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

விவசாய முறைகளிலும், காலத்திலும் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி, வேளாண் வல்லுநர்கள் யோசிக்கலாமே?

மேனா. உலகநாதன்

நன்றி : 12. 12. 2010, தினமலர் – செய்திமலர்