Wednesday, October 27, 2010

புதிய பதிவு....


இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

இமயமும் குமரியும் நிலைகுலைந்து நிற்கிறது.
காஷ்மீரின் தால் ஏரி குங்குமமாய்ச் சிவந்து கிடக்கிறது.
இளைஞர்களும், பெண்களும் இந்திய ராணுவத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக வீசி எறிந்த கற்கள் மலை போல் குவிந்து எழுந்து நிற்கின்றன.
அதன் மேல் நின்று உரத்துக் கூவுவதைப் போல் சொல்லி இருக்கிறார் அருந்ததி ராய்…
‘காஷ்மீர் ஒரு போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை. இது ஒரு வரலாற்று உண்மை’
இன்னொரு பக்கம், தமிழக மீனவர்கள் அனைத்து நம்பிக்கையும் வற்றிப்போன நிலையில், சாட்சிக்காரனை விட சண்டைக்காரனே மேல் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
அடுத்த மாதம் 5ம் தேதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து, தங்கள் மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள்.
அருந்ததிராயின் வார்த்தைகளுக்காக கோபப்படும் நமது தேச பக்தர்கள், மீனவர்களின் இந்த முடிவுக்காக வெட்கப்படவில்லை.
நொடிக்கு ஒரு முறை, இறையாண்மை குறித்து இரைச்சலிடும் இவர்களுக்கு, மீனவர்களின் இந்த நிலை குறித்து எந்தச் சங்கடமும் இல்லை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்தியாவுக்கு, தமது குடிமக்களில் ஒரு பகுதியினர், பிழைக்க வழி கேட்டு அடுத்த நாட்டு அதிபரை அண்டும் நிலை குறித்து, எந்த அருவருப்பும் இல்லை.
இதுதான் இவர்களின் இறையாண்மை.
ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டாலும், மன்மோகன் சிங், எஸ்.எம், கிருஷ்ணா என அனைவரின் அங்கமும் பதறும்.
அறிக்கைகள் என்ன, கண்டனங்கள் என்ன, நேரில் சென்று பேசுவது என்ன…
எல்லாம் தூள் பறக்கும்.
இலங்கைக் கடற்படைக் காட்டுமிராண்டிகளிடம் பல ஆண்டுகளாக அடிவாங்கி, மிதிவாங்கி வதை படும் மீனவர்கள் பற்றி எந்தக் கவலையும் அவர்களுக்கு இல்லை.  ஏனென்றால் அவன் தமிழன்.
அதன் விளைவுதான், இவர்களைக் கெஞ்சுவதைவிட, ராஜபக்சேவை நேரில் சந்தித்தே கெஞ்சலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.  
சரி. இந்த நிகழ்வுகளை மைய அரசு எப்படிப் பார்க்கிறது?
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்ற ‘தேசவிரோத’க் கருத்தைச் சொன்னதற்காக அவர் மீது என்ன வழக்குப் போடலாம் என யோசித்து வருகிறது.
மனச்சாட்சி சொன்னதை வெளியிடும் எழுத்தாளர்களைச் சிறையிலடைக்க வேண்டிய நிலைக்கு இந்த தேசம் தள்ளப்பட்டதை எண்ணிப் பரிதாபப்படுவதாக இது குறித்த கேள்விக்கு அருந்ததிராய் பதில் அளித்துள்ளார்.
ராமேஸ்வரத்திலோ, ராஜபக்சேவைச் சந்திக்க உள்ள மீனவப் பிரதிநிதிகளிடம் உளவுத்துறையினர், விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இறையாண்மை என்பது மக்களிடம் இயல்பாக உருவாக வேண்டிய உணர்வு. அதை அதிகாரத்தால் அச்சுறுத்தி உருவாக்க முடியாது.
காஷ்மீரிலும், ராமேஸ்வரத்திலும் மக்களிடம் ஏற்பட்டுள்ள தன்னெழுச்சி, விடுதலை மற்றும் சுய மரியாதை உணர்வில் இருந்து முகிழ்த்திருப்பது.
இதை வெறும் தேசவிரோதச் சட்டத்தால் மட்டும் ஒடுக்கிவிட முடியாது என்பதை மைய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
எளிய மக்களுக்கு எதிரான கீழறுப்பு வேலைகளை விட்டு விட்டு, கருத்து நேர்மையோடு அணுகும் போதுதான் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
அது மைய அரசால் சாத்தியமா? அதுவும் காங்கிரஸ் கட்சி தலைமையில் இயங்கி வரும் அரசால்…!
மேனா. உலகநாதன்.  

No comments:

Post a Comment