Monday, November 1, 2010

புதிய பதிவு....


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்…?

த்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் வழக்கம் போல எளிய மக்களுக்கு  எதிரான தன் திருவுளத்தை, மீண்டும் ஒருமுறை திறந்து காட்டி இருக்கிறார்.
அனைவருக்கும் உணவு என்ற இலக்கை அடைய, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி அல்லது  கோதுமையும், மற்றவர்களுக்கு 20 கிலோவும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் வழங்க வேண்டும் என அண்மையில், சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக்குழு பரிந்துரை செய்தது.
இதன் மூலம், கிராமப்புற, நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் தவறாமல் உணவுகிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என நம்பப் பட்டது.
ஆனால்….
உணவுக் கழக கிடங்குகளில் கெட்டு வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கினால் என்ன என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, அதெப்படி முடியும் எனக் கொதித்தெழுந்த சரத்பவார், தற்போது தேசிய ஆலோசனைக் குழுவின் இந்தப் பரிந்துரைகளையும் புறந்தள்ளி இருக்கிறார்.
தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற, ஆண்டுக்கு 610 லட்சம் டன் தானியம் கொள்முதல் செய்ய வேண்டியது வரும் என்றும், அப்படிச் செய்வது அரசால் சாத்தியமில்லை எனவும் அவர் கூறி இருக்கிறார்.
ஒரு பணக்காரக் கிரிக்கெட் ஆர்வலரிடம், ஏழைகளின் பசி பற்றிய புரிதலை எதிர்பார்ப்பது தவறுதான்.
ஆனால், மத்திய அரசும், மன்மோகன்சிங்கும் அவரிடம் அதை விடாப்பிடியாக எதிர்பார்க்கிறார்களே!
அது ஒரு அரசியல் விளையாட்டு.
எனக்கு இந்தப் பதவி வேண்டாம் என்று சரத்பவார் மிரட்ட, அய்யய்யோ விட்டு விடாதீர்கள் என மன்மோகன் சிங் சமாதானம் செய்ய, அவ்வப்போது அரங்கேறும் அந்த விளையாட்டு, சரத்பவாரின் ஆழமான சுயநலப் பின்னணிகளைக் கொண்டது.
ஆனால் அதற்குப் பலியாவது அரைவயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப்பறக்கும் ஏழைகள்.
உலகில், மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் போதிய ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் வாழும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறது ஐ. நா வின் உணவுத் திட்ட அமைப்பு.
ஆனாலும் அதற்கான பிரத்தியேகத் திட்டங்களை,  முழு வீச்சில் செயல் படுத்துவது குறித்த அக்கறை நம் தலைவர்களுக்கு இருந்தது இல்லை.
அத்தி பூத்தாற்போல எப்போதாவது இது போன்ற (உணவு உறுதித் திட்டம்) திட்டங்கள் குறித்த பேச்சு எழும்போது, அதற்கு முட்டுக்கட்டை போடவும் தயங்குவது இல்லை.
ஆண்டுக்கு 600 லட்சம் டன் தானியங்களைக் கொள்முதல் செய்வது ஓர் அரசால் சாத்தியமில்லை என சண்டித்தனம் செய்யும் சரத்பவார் போன்றவர்கள், ஒன்றை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
விவசாயத்திற்கும் அதன் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கும் வழங்கப்பட்டு வரும் மானியம் வளர்ந்த நாடுகளில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இந்தியாவில் அது குறைந்து கொண்டே போகிறது என்பதுதான் அது.
வளர்ந்த நாடுகளில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தின் மதிப்பு,  கடந்த 2007ம் ஆண்டில் 362.2 பில்லியன் டாலராக இருந்தது. (ஒரு பில்லியன் 100 கோடி ரூபாய்). இது 2008ம் ஆண்டில் 379.4 பில்லியன் டாலராகவும், 2009ம் ஆண்டில் 383.7 பில்லியன் டாலராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை என்ன தெரியுமா?
1986 – 88ல் இந்தியாவின் ஒட்டுமொத்த செலவில் 2.3 சதவீதத் தொகை விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இது கடந்த 20 ஆண்டுகளில் ( 2007ம் ஆண்டு)  0.9 சதவீதமாக குறைந்து விட்டது.
கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்துறையில் நாம் எட்டி இருக்கும் வளர்ச்சி, வெறும் 2.5 சதவீதம் மட்டுமே.
ஆனால் இன்னும் நாம் பெருமிதத்துடன் சொல்லிவருவது ‘இந்தியா ஒரு விவசாய நாடு’.
தொழில்துறை, சேவைத்துறை இவற்றின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையில்,  சிறிதளவு கூட நாம் விவசாயத்துறையில் காட்டவில்லை என்பதே உண்மை.
தொண்ணூறுகளில் தொற்றிய உலகமயமாக்கல் நோய், நமது தற்சார்பு என்ற உயிர்ச் செல்கள் அனைத்தையும் கொன்றொழித்து விட்டது.
உயிர்த் தொழிலான விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
எங்கோ இருக்கும் ஒரு நாட்டின் நிறுவனத்திடமிருந்து, மற்றொரு நாட்டின் நிறுவனத்திற்கு தகவலைப் பெற்றுத் தரும் தொழில் நுட்பம், நமது பொருளாதாரத்தின் ஆதார சுருதியாக சித்தரிக்கப்பட்டது.
5 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே பணிபுரிய முடிந்த, தகவல் தொழில் நுட்பத் துறை, அனைவருக்கும் பொதுவானது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது.
விளைவு…. விவசாயம் ஒரு காலாவதியான தொழில் என்ற சிந்தனை, இன்றைய இளைஞர்களுக்குள் மிக இயல்பாகவும், எளிதாகவும் வேரூன்றி விட்டது.
நவீனச் சுழற்சி தரும் கிறக்கத்தில், உற்பத்தி சார்ந்த தொழில் துறைகளே காலாவதியானவையாகத் தெரியும் போது, விவசாயத்தை அப்படிப் பார்க்கத் தோன்றியதில் ஆச்சரியமில்லை.
பசுமைப் புரட்சி நம் மண்ணை மலடாக்கியது. தகவல் தொழில் நுட்பப் புரட்சி நம் சந்ததியையே உற்பத்தித் திறன் அற்றவர்களாக ஆக்கி வருகிறது.
உற்பத்தித் திறனை இழக்கும் நாடு, விரைவில் தற்சார்பையும் தானாகவே இழக்கும்.
பணக்காரர்கள் எனும் தரகர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அம்பானிகள் இன்னும் பல கண்ணாடி மாளிகைகள் கட்டுவார்கள்.
ஏழைகள் படு ஏழைகளாகி பட்டு மடிவார்கள்.
இதை நோக்கித்தான் நமது இந்தியா இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், பசித்துக் கிடக்கும் மனிதர்கள் குறித்த கவலை, ஆட்சியாளர்களை நிம்மதி இழக்கச் செய்கிறது.
தேர்தலில் வாக்களிக்க அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமே!
சில நூறு பணக்காரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு தேர்தல் எனும் நாடகத்தை நடத்த முடியாதே!
அதற்காகத்தான் இந்தப் பசி ஒழிப்புத் திட்டங்கள் எல்லாம். அவற்றைக் கூட சரத்பவார்களால் அனுமதிக்க முடியவில்லை.
ஆனால், பசி எனும் நெருப்பு பற்றி எரியத் தொடங்கினால், அரசும், அதிகாரமும் அதன் முன் ‘வைத்தூரு போலக் கெடும்’ என்பதை இவர்கள் மறந்து விடக் கூடாது.  
மேனா.உலகநாதன்

நன்றி : தினமலர் - செய்திமலர்,  31.10.10 (நெல்லைப் பதிப்பு)

No comments:

Post a Comment