Thursday, December 9, 2010

இப்போது…


பாறைகளின் மௌனம் 
உங்களுக்குப் பிடிக்குமா
அலைகளை விழுங்கிச் செரிக்கும் 
அதன் உன்மத்தம்
வாழ்வின் பருகத் தீராத மது

மோதிச் சிதறும் 
அலைத்துளிகளின் திவலைகள்
தரும் போதத்தில் 
இன்னும் இன்னும் இறுக்கம்
கொண்டு புடைக்கும் 
அதன் திமிர்
ரசிக்கத் தீராத சாகசம்

ஆங்காரத்துடன் வருவதும் 
அடிபணிவதுமாய்த்
திரும்பும் அலைகளின் 
தோல்வியில்
அதன் கம்பீரம் 
மேலும் உயிர்க்கிறது

எல்லோரும் நினைத்தார்கள்
வாழ்வின் மூர்க்கம் 
விளிம்பில் நிற்கும் எமை 
வீழ்த்தி விடுமென்று
எறும்பூரத் தேயும் கல்லோ 
நாம் கரைவதற்கு

காலம் சிதறுகிறது
கடவுள் அழுகிறான்

நம்பிக்கை அனைத்தும் 
வற்றிப் போன கடலின் வெறுமை
அவனைச் சஞ்சலம் கொள்ளச் செய்கிறது.

இப்போது
பாறையின் புன்னகைக்குள்
அவன் மெல்லப் புதைகிறான்.
மேனா.உலகநாதன்

No comments:

Post a Comment