Tuesday, December 7, 2010


அம்மத்தாள்

பக்கங்கள் படபடக்க
எப்போதும் என்னுள் விரியும்
நைந்து பழுப்பேறிப்போன
பழந்தமிழ்ப் புத்தகம்

நான் குழையும்போதெல்லாம்
திறந்து கொள்ளும்
அவளின்
பொக்கைவாய்ச் சொர்க்க வாசல்

மரணக்கதவுகளால் மூடப்பட்டும்
மறுபடி மறுபடி மனசுதட்டும்
அவள் நினைவசைவு

அவள் தந்த கருவாடும் கஞ்சியும்
கம்ப்யூட்டர் யுகத்தின்
நாசிகள் அறியா
வாசனை அற்புதம்

சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள்
நுழைந்தும் அலைந்தும்
என் ஜீவன் நுகர்ந்த பந்தம்
இன்னும் தேங்கிக் கசிகிறது
உயிர்ச்சுனையில்

கொட்டவும் முடியாமல்
பத்திரப்படுத்தவும் முடியாமல்
திரிந்து போன என்
வாழ்வுப் பாலுடன்
அவளது நினைவுகளும்.

மேனா. உலகநாதன்

No comments:

Post a Comment