Thursday, February 3, 2011


என்ன குற்றம் செய்தார்கள்?
நான் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மனிதக் கழிவுகளை அகற்றிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன். அப்போது எவ்வளவு கதறியும் என்னை கை கொடுத்துத் தூக்க யாரும் முன்வரவில்லை. கழிவோடு கழிவாக புறக்கணிக்கப் பட்டேன். பொதுவாக எங்களைப் பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆட்டி போ, போ என்று கூறி விரட்டுகிறார்கள்’

அனிதா, பஞ்சாப் மாநிலம்.

‘நான் பள்ளியில் படித்த போது என்னை மட்டும் வேறு தட்டு மற்றும் குவளை எடுத்துவரச் சொல்லி விரட்டுவார்கள். கேட்டால் என் தாயார் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை பார்த்துவருகிறாராம். இன்று வரை பள்ளிகளில் என் போன்ற குழந்தைகளுக்கு இந்த கொடுமை தொடர்கிறது. எங்கள் பிள்ளைகள் ஏன் பெரிய படிப்பு படிக்க முடியவில்லை. கலெக்டர் ஆக முடியவில்லை….’

உமையாள், தமிழ்நாடு.

டெல்லியில் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan) என்ற அமைப்பு சார்பில், சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பெண்களிடமிருந்து பீறிட்ட, ஆயிரமாண்டுகால ரணத்தின் ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்தான் இவை.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மனிதக்கழிவுகளை கையினால் அள்ளும் துப்புறவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். அதில், தமிழகத்தில் இருந்து உமையாள் என்ற தமிழ்ப்பெண்ணும் கலந்து கொண்டிருக்கிறார்.

‘சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்லுகிறீர்களே… எங்களுக்கு மட்டும் அது இல்லையா? குறைந்த பட்சம் மனிதர்களாக கூட எங்களை இங்கே யாரும் மதிக்க மறுக்கிறார்களே? வீடுகளுக்குள் மட்டும் அல்ல. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் இப்படி எங்குமே நாங்கள் மனிதர்களாக நுழைய முடியவில்லையே…மலம் அள்ள மட்டும் தானே எங்களை அனுமதிக்கிறார்கள்? ஏன்? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?’

அந்த பேரணியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களும் அவரவருக்குத் தெரிந்த மொழியில் எழுப்பிய இந்த கேள்வி, இந்திய ஆன்மாவின் சிண்டைப் பிடித்து உலுக்குவதாக இருந்தது.

அந்த பேரணியில் அவர்கள் முன்வைத்த முழக்கம் என்ன தெரியுமா?

‘எங்களை சுயமரியாதை இன்றி நடத்திய அரசே மன்னிப்பு கேள்… மன்னிப்பு  கேள்’

மன்னிக்கக் கூடிய கொடுமையையா இந்த நாடும் சமூகமும் அவர்களுக்குச் செய்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மத்திய அரசு இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

ஏன்?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 1993ம் ஆண்டிலேயே, உலர் கழிப்பறைகள் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.
அது மட்டுமல்ல.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் வழக்கம் அதிக அளவு நடைமுறையில் இருப்பது மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் ரயில்வே துறையில்தான்.

மற்றபடி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இப்படி அரசின் அனைத்து அதிகார மட்டத்திலும், இந்த இழிவு இன்றுவரை முழுமையாக நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உலர் கழிப்பறைகள் அமைக்கத் தடைவிதிக்கப் பட்டிருந்தும் பல இடங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டிருப்பதை அந்த மனு சுட்டிக்காட்டியது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழகத்தில் மனிதக் கழிவுகளை கையினால் அகற்றும் பணியில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது என அப்போது தடைவிதித்தது. 

மேலும், இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து, கையினால் மனிதக் கழிவுகளை அள்ளும் வழக்கத்தை ஒழிப்பதுடன், அந்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கு வது குறித்தும் அவ்வப்போது ஆலோசிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி, அந்த தொண்டு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை (31.1. 11) சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். அப்போது தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு இது தொடர்பாக  கடந்த மாதம் 25ம் தேதி எழுதிய கடிதத்தின் நகல் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

எப்படியோ, விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு வகை செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதி மன்றம் தன் பங்குக்கு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை ஒழிக்க முடிந்தவரை முயற்சித்திருப்பதை மறுப்பதற்கில்லை.

சட்டம் ஒழுங்கு குறித்து சதா கவலை கொள்ளும் நமது அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், இது போன்ற சட்டங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பைக் கூட கொடுப்பதில்லை என்பதுதான் இதில் வேதனை.

அரசியல் சட்டத்தையோ, அதனை உருவாக்கிய அம்பேத்காரையோ மதித்திருந்தால், இன்று வரை இந்த பழக்கம் தொடர அனுமதித்திருப்பார்களா?
அவர்ளைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு என்பது ஆளும்கட்சியாக இருக்கும் போது அதிகாரம் செலுத்தவும், எதிர்க்கட்சியாக இருக்கும்  போது பழி சுமத்தவும் மட்டுமே பயன்படும் வசதியான ஆயுதம்.

மற்றபடி எளிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட எந்த சட்டத்தையும் இவர்கள் மதிப்பதே இல்லை. அதன் விளைவுதான் தீண்டாமைக் கொடுமை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அது தொடர்ந்து கொண்டிருப்பது. அதன் மிக அருவருக்கத்தக்க மற்றொரு முகம்தான், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது.

அந்த சமூகத்தில் பிறந்ததைத் தவிர அந்த பரிதாபத்துக்குரியவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மனித இனத்தின் நாகரிகம் குறித்து பெருமிதம் கொள்ளும் ஒவ்வொருவரது மனச்சாட்சியையும் பிடித்து உலுக்கும் இந்த கேள்விக்கு நாம் சொல்லப் போகும் பதிலும்தான் என்ன?
மேனா. உலகநாதன் 

6.2.11, தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு)

No comments:

Post a Comment