Wednesday, February 9, 2011


அவர்கள் காத்திருக்கிறார்கள்!

“ஆவீன மழைபொழிய இல்லம்வீழ..!
அகத்தடியாள் மெய்நோவ‌ அடிமை சாக..!
மாவீர‌ம் போகுதென்று விதைகொண்டோட‌..!
வ‌ழியிலே க‌ட‌ன்கார‌ன் ம‌றித்துக் கொள்ள..!
சாவோலை கொண்டொருவ‌ன் எதிரே தோன்ற‌..!
த‌ள்ள‌வொணா விருந்துவ‌ர‌ ச‌ர்ப்பந்தீண்ட..!
கோவேந்த‌ர் உழுதுண்ட‌ க‌ட‌மை கேட்க‌..!
குருக்க‌ள் வ‌ந்து த‌ட்ச‌ணைக‌ள் கொடு என்றாரே..!!!”

உழுதுண்டு வாழ்பவனின் அன்றாட வாழ்க்கை நெருக்கடியை, சித்தரிக்கும் விவேகசிந்தாமணி என்ற பழந்தமிழ் நூல் பாடல் வரிகள்தான் இவை.
சம்சாரி என்றும் குடியானவன் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட ஏழை விவசாயி ஒருவனுக்கு, ஒரே நேரத்தில் நேரும் துயரங்கள்தான் எத்தனை?

‘மாடு கன்று போடுகிறது. அடை மழையோ கொட்டுகிறது. அந்த மழையால், குடியிருந்த வீடும் இடிந்து விழுகிறது. மனைவி திடீரென நோய்வாய்ப்படுகிறாள். உதவிக்கு இருந்த வேலையாளும் திடீரென இறந்து போகிறான். இத்தனை நெருக்கடிக்கு இடையேயும், மழை பெய்த ஈரம் காயுமுன்னே விதைத்துவிட வேண்டும் என்ற பதற்றத்துடன், விதையை எடுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறான் அந்த விவசாயி. வழியிலே கடன்காரன் வந்து மறித்துக் கொள்கிறான். அதோடு முடிந்தததா? நெருங்கிய உறவினர் இறந்து விட்டதாக ஒருவன் சாவோலையோடு எதிர்வருகிறான். சரி. இவர்களையெல்லாம் சமாளித்து அங்கிருந்து அவன் நகரும்போது தவிர்க்க முடியாத விருந்தினர் வருகின்றார். அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால், மகனைப் பாம்பு கடித்து விடுகிறது. அரசன் வரிகேட்டு ஆள் அனுப்பி இருக்கிறான்.  அந்நேரம் பார்த்து ஏற்கனவே செய்த சடங்குகளுக்கு தட்சணை கேட்டு குருக்கள் வந்து நிற்கின்றார்….’

துயரத்தை பட்டியலிட்ட நமக்கே மூச்சுவாங்கும் பொழுது அனுபவித்தவன் பாடு எப்படி இருந்திருக்கும்…?

விவசாயி என்பவனின் நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வருகிறது என்பதை, இந்த பழம்பாடல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

காலம் முடியாட்சி முறையில் இருந்து, குடியாட்சிக்கு மாறிவிட்டது.  அரசுகளும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. விவசாய வளர்ச்சிக்கென திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனாலும், சாரசரி இந்திய விவசாயியின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

இந்தியா ஒரு விவசாய நாடு என்ற முழக்கத்தை நமது தலைவர்கள் இன்னும் கூட  முற்றாக நிறுத்தி விடவில்லைதான். காரணம் கணிசமான வாக்கு வங்கி கிராமப்புற விவசாயிகளின் கையில் தான் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை குறித்து அவ்வப்போது அவர்கள் கொள்ளும் கவலையும் கூட, நமக்கு ஒரு வாக்கு குறைகிறதே என்ற அடிப்படையில் மட்டுமே அன்றி அக்கறையில் அல்ல.

இது வரை ஏறத்தாழ 78 மத்திய நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் அடுத்த நிதி நிலை அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பெருந்தொழிலதிபர்களோடு நிதியமைச்சர் பிரணாப் ஆலோசிக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கிறார். பெரு முதலாளிகளோடு ஆலோசிக்கிறார். எதிர்க்கட்சிகளோடும் கூட வேறு வழியில்லாமல் ஆலோசிக்கிறார்.
ஆனால்… 80 சதவீத மக்களின் வாழ்வாதாரமான  விவசாயம் தொடர்பான நிதி நிலை அம்சங்கள் குறித்து யாரோடும் ஆலோசித்ததாக தெரியவில்லை. அதுதான் மொத்தமாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்களே என்று கேட்கலாம்.

மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூடத் தேறாத பெருமுதலாளிகள் பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தானே அவர்களின் விருப்பத்தைக் கேட்டறிகிறார்கள்.

பெருமுதலாளிகளின் பெருவிருப்பத்தைக் கேட்டறியும் ஆளும் தரப்பு, அன்றாடம் சீரழிந்துவரும் விவசாயிகளின் சிறு விருப்பங்களையேனும் கேட்டறியலாம் தானே…?

இந்த பட்ஜெட்டில் இடம்பெற உள்ள தொழில் துறைக்கான வரிச் சலுகைகள், பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் குறித்தெல்லாம், சில உயர்தர (மேல்தட்டினருக்கான) ஆங்கில வணிக நாளேடுகளில் பக்கம் பக்கமாக யூகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை யூகங்கள் என்பதை விட, பெருமுதலாளிகள் அரசுக்கு இடும் மறைமுக கட்டளைகள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் விவசாயிகள் குறித்து அவை போன்ற ஏடுகள் மூச்சுக்கூட விடுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை விவசாயமும், விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள். எப்படியோ அவர்கள் ஒழிந்தால் சரிதான். (தற்கொலை செய்துகொண்டாவது!)

எனினும், கேட்பாரற்று தடுமாறும் விவசாயிகள் நலம் குறித்து சிந்திக்கும் சில சமூக ஆர்வலர்கள், விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2011ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், விவசாய வளர்ச்சிக்கான சில அம்சங்கள்  இடம்பெற வேண்டும் எனவலியுறுத்தி வருகின்றனர். அவை இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைகைக் கொண்டவையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் என்ன?

‘விவசாயத்தை வளர்க்க இந்த 60 ஆண்டுகளில் போடாத திட்டங்கள் எதுவும் இல்லை. அவை எல்லாம் விவசாயிகளுக்குப் போய்ச் சேர்கின்றனவா என்பதை முதலில் உறுதிப் படுத்த வேண்டும். உற்பத்தியைப் பெருக்க மானியக் கடன். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு. பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு. வறுமையை ஒழிக்க வேலை உறுதித் திட்டம். இப்படி பல திட்டங்கள் செயல்படுத்தப் பட்டாலும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை’ என்கிறார்கள் அவர்கள்.

விவசாயிகளின் தேவைதான் என்ன? என்ற கேள்விக்கும் அவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

‘விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமூகத்தின் மற்ற எந்தப் பிரிவினரைக் காட்டிலும், சுயமரியாதையோடும், உழைப்பைச் சார்ந்தும் வாழக் கூடியவர்கள். அவர்களுக்கு தேவை தள்ளுபடிகளும், இலவசங்களும் மட்டும் அல்ல. அவை பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களின் தாக்கத்தால் விவசாயத்தில் ஏற்படும் புதிய சவால்களை சந்திக்க அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். உதாரணமாக, உற்பத்தியைப் பெருக்க திட்டம் என்பது காலாவதியாகிப் போன பழைய உத்தியாகி விட்டது. இப்போது சந்தை முக்கியப் பிரச்சனையாகி விட்டது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான சந்தை எது என்பதே தற்போதைய பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன? உற்பத்திக்கு உரிய விலை அதற்கான சந்தையில் தான் கிடைக்கும். இந்த சந்தையைத் தீர்மானிப்பதிலும், உருவாக்குவதிலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

வியாபாரிகள் என்ற போர்வையில் விவசாயிகளின் உற்பத்திக்கான லாபத்தை உறிஞ்சும் இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கமற்ற கொள்முதல் நிலையங்கள், தானியங்களை பதப்படுத்தி பாதுகாக்கும் வசதிகளோடு அமைய வேண்டும். நகர்ப்புற மக்கள் உள்ளிட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த தேவை, உற்பத்தி, தடையற்ற விநியோகம் இந்த மூன்றுக்கும் இடையில் ஒழிவு மறைவற்ற பரிவரத்தனைச் சங்கிலித் தொடரை உருவாக்க வேண்டும். இது அரசால் மட்டுமே முடியும். பன்னாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதன் பலன் விவசாயிகளைச் சென்றடையாது. (உதாரணம் - தற்போது உள்ள ரிலையன்ஸ் பிரஷ் உள்ளிட்ட மெகா ஸ்டோர்கள்)

அரசு கொள்முதல் நிலையங்கள் இப்போதும் உள்ளன. காலக்கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தடைகளால் விவசாயிகள் பெரும்பாலும் இழப்பையே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீக்கப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்காக நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் நவீனக் கட்டமைப்பு வசதிகளுக்கு செய்யும் செலவில், பத்து சதவீதம் கிராமப்புற கட்டமைப்புகளையும், கொள்முதல் நிலையங்களையும் நவீனப்படுத்த செலவிட்டாலே, விவசாயிகளின் 90 சதவீதப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

உற்பத்தி – உரிய விலை – தடையற்ற விநியோகம் என்ற பரிவர்த்தனை உத்தியை வலிமைப் படுத்துவதன் மூலம் மட்டுமே விவசாயத்தை ஒரு கௌரவ மிக்க தொழிலாக வளர்த்தெடுக்க முடியும். எவரும் தயங்காமல் நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகும். வரும் மத்திய நிதி நிலை அறிக்கையில், விவசாயத்திற்கான திட்டங்கள் இதனை அடிப்படையாக கொண்டு தீட்டப்பட வேண்டும். மொத்தத்தில், கிராமப்புறங்களை வளப்படுத்தும் விவசாயம் சார்ந்த திட்டங்களில், வெறும் வறுமை ஒழிப்பு என்பதில் இருந்து அடுத்த கட்டத்தை நோக்கி, அரசின் அணுகுமுறை எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே, விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த நெடுங்காலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.’

விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து கவலை கொள்ளும் மிகச்சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள இந்த கருத்துகளை நமது மத்திய அரசு கவனத்தில் கொள்ளுமா? 2011ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அதற்கான திட்டங்கள் இடம்பெறுமா?

60 ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்த அரசு மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள் இந்திய விவசாயிகள்.
மேனா.உலகநாதன்

13.2.2011, தினமலர் செய்திமலர் (நெல்லைப் பதிப்பு).

No comments:

Post a Comment