Saturday, March 5, 2011

இ(எ)ப்போதும் ஏமாற்றம்தான்…

‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் வரிகள், விவசாயிகளுக்கு தற்போதெல்லாம் பெரிய நம்பிக்கையைக் கொடுப்பதில்லை.
எத்தனை காலத்துக்கு வேண்டுமனாலும் மக்களை ஏமாற்றலாம் என்பதை நமது அரசுகள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதே அதற்கு காரணம்.

2011- 12ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மூலம், மத்திய அரசு தனக்கு இருக்கும் அந்த ‘புரிதல் தெளிவை’ மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. 
விவசாயத்தை நம்பிக்கையூட்டும் வாழ்வாதாரத் தொழிலாக மாற்றுவதற்குரிய சிறப்பான எந்த அம்சமும், இடம்பெறாமலே இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்து முடித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி.

2011 – 12ம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய ஒரே அறிவிப்பு, உணவு உறுதித் திட்டத்திற்கான மசோதா, நடப்பாண்டிற்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது மட்டும்தான் என்கிறார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

ஆனால், அதற்கான நிதி ஆதாரமே ஒதுக்கப்படாமல், எப்படி அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்கிறார் மற்றொரு பொருளாதர விமர்சகர். கடந்த 2010 – 11ம் ஆண்டு, உணவுப் பொருள் மானியத்துக்காக 60 ஆயிரத்து 599,53 கோடி ரூபாய் ஒதுக்கிய மத்திய அரசு, தற்போதைய 2011 – 12ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அதனை  60 ஆயிரத்து 572.98 கோடி ரூபாயாக குறைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

பின்னர் எப்படி, உணவு உறுதித் திட்டத்தை முறையாக நிறைவேற்ற முடியும்?

முறையாக கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு விவசாயக்கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி செய்யவும் சக்தி இன்றி, அதற்கு உரிய விலையைப் பெறவும் வழி இன்றித் தவிக்கும் இந்திய விவசாயி, எங்கிருந்து தவணை தவறாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவான்?

உணவு பதனிடும் தொழில் நுட்பத்தின் பக்கம் மத்திய அரசின் கவனம் முதல் முறையாகத் திரும்பி இருப்பது, இந்த பட்ஜெட்டில் தென்படும் ஓர் ஆறுதலான அம்சம் எனலாம்.

மற்றபடி, அடுத்த தலைமுறையினரை ஈர்க்கும் வசீகரம் மிக்க தொழிலாக விவசாயத்தை மேம்படுத்தும் எத்தகைய தொலை நோக்கு வியூகங்களும் மத்திய அரசிடம் இல்லை என்பது, இந்த பட்ஜெட்  அறிக்கை மூலம் மீண்டும் ஒரு முறை உறுதியாகி உள்ளது.

வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்கள் யாரும் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பாத நிலையில், அவர்களை ஈர்ப்பதற்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக இந்த பட்ஜெட் குறித்து விமர்சித்துள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியிருப்பது இங்கே கவனத்துக்குரியது.

வேளாண் படிப்பில் பட்டம்பெற்ற பெரும்பாலான இளைஞர்கள், ஏதாவது ஒரு நிறுவனங்களில் சேர்ந்து பணியாற்றுவதையே விரும்புகின்றனர்.
அவர்களின் இத்தகைய மனப்போக்கில் மாற்றம் ஏற்பட, விவசாயத்தை நாட்டின் முழுமையான ஆதாரத்தொழிலாக வளர்த்தெடுப்பதற்கான நேர்மையான முயற்சிகள் தேவை. அதனை நமது சரத்பவார் போன்றவர்களிடம் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விவசாயத்திற்கென தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பல முறை வலியுறுத்தி உள்ளார். ஆனால், மத்திய அரசே, இதுவரை  அதனைச் செய்ய முன்வரவில்லை என்பதுதான் வேதனை.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் வழியில், ரயில்வேத்துறைக்கென்று தனி பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதை தன் சிரமேற்கொண்ட கடமையாக கருதி நிறைவேற்றிவரும் மத்திய அரசு, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை, தனிப்பெருந்தொழிலாக இதுவரை அங்கீகரிக்கத் தயாரக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

அண்மையில், கர்நாடக மாநிலத்தில், எடியூரப்பா தலைமையிலான அரசு, விவசாயத்திற்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருப்பதன் மூலம், அத்துறையின் அடிப்படையான பிரச்சனைகளில் அம்மாநில அரசு மிக அழுத்தமாக தன் கவனத்தைச் செலுத்தி உள்ளது.

அதனைப் புரிந்து கொள்ள கர்நாடக மாநில அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டின் சில அம்சங்கள் இதோ….
·         நவீன உணவுப் பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை.

·         சுவர்ண பூமி திட்டப்படி 10 லட்சம் விவசாயிகள் குடும்பங்கள் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

·         கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒரு சதவகித வட்டியில் கடன்.

·         இயற்கை உர விவசாய வளர்ச்சிக்கு ரூ.200 கோடி.

·         உயிரி எரிபொருள் திட்ட மேம்பாட்டுக்கு ரூ.125 கோடி.

·         விவசாயக் கருவிகள் மானியத்துக்கு ரூ.100 கோடி.

·         நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கான பூ சேத்தனா திட்டத்துக்கு ரூ.40 கோடி.

·         விவசாய அடிப்படை கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்குதல்.

·         விவசாய மின் இணைப்புகளை பலப்படுத்த ரூ.3,900 கோடி ஒதுக்கீடு.

·         ஏரிகளைத் தூர்வாரவும், அதில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கவும்
ரூ.1000 கோடி.

·         உயர் கல்வி படிக்கும் விவசாயிகளின் குழந்தைகளுக்கு வட்டி இல்லாத
கடனுதவி.

·         2011 முதல் 2020-ம் வரையிலான ஆண்டை நீர்ப்பாசன ஆண்டாக அறிவித்து நீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ.50 ஆயிரம் கோடி திரட்டுதல்.

என இன்னும் பல அம்சங்கள்....

கர்நாடக மாநில அரசின் பட்ஜெட்டை தமிழகத்தில் பட்டியலிட்டு என்ன செய்ய என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகம் உட்பட மற்ற மாநில அரசுகளும் இதனைப் பின்பற்றலாமே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான்.

மத்திய அரசு மரபணு மாற்ற விவசாயத்தை ஆதரிக்கும் நிலையில், கர்நாடக மாநில அரசு, இயற்கை வேளாண்மைக்கும், நிலத்தின் உயிர்ச்சத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்குகிறது.

இதில் இருந்தே மாநில அரசுகள், வேளாண்மைக்கென்று தனிக்கொள்கையையும், நிதி நிலை அறிக்கையையும் வகுப்பதில் உள்ள அனுகூலம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இளைஞர்கள் ஏற்கும் தொழிலாக விவசாயத்தை மாற்றுவதற்கான திட்டத்தோடு, மண்வளத்தைப் பாதிக்காத வேளாண்முறையையும் அதன் மூலம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை,  கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநில அரசுகளும் ஏன் இதனைப் பின்பற்றக்கூடாது?

மேனா. உலகநாதன்

நன்றி தினமலர் - செய்திமலர்

Saturday, February 26, 2011


எதற்கு இந்த இரட்டை வேடம்?

“இந்த அரசுக்கு பதின் ஆண்டுகளின் (Decades) தொடக்கம் எது என்பதே இன்னும் தெரியவில்லை. கடந்த 2010ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதே போன்று பதின் ஆண்டுகள் தொடங்குவதாக கூறினார். இந்த ஆண்டும் உரையின் தொடக்கத்தில் அதையே கூறுகிறார். இதில் இருந்தே இந்த அரசின் உணர்ச்சியற்ற தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது”

மக்களவையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ்காரட், 
இப்படித்தான் தமது உரையைத் தொடங்கினார்.

அவரது இந்த விமர்சனத்தை வெறும் அரசியல் நையாண்டியாகப் புறந்தள்ளி விட முடியவில்லை.

ஒரு குடியரசுத் தலைவரின் உரையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற அதே உறுதி மொழிகளும், கருத்துருக்களும் இந்த ஆண்டும் இடம்பெறுவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள எவரையும் ஆத்திரப்பட வைப்பதில் வியப்பில்லை.
விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதில் இதே மெத்தனப்போக்கை இந்த அரசு காட்டிவருவதாகவும்  பிரகாஷ் காரட் அப்போது குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் மீதான அவரது இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல இருந்தது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்து, மத்திய நாடாளுமன்ற விவகார மற்றும் திட்டமிடல் துறை அமைச்சர் அஷ்வினி குமார், மக்களவையில் அதே நாளில் சமர்ப்பித்த அறிக்கை.

கடந்த 2002ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி நாட்டில் 5.5 கோடிப் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

ஆனால், இந்த கணக்கெடுப்பில் சில மாநிலங்களில் முழுமையான தகவல்களை பெற முடியவில்லை என்ற உண்மையையும் அந்த அறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த மதிப்பீட்டின் படி, பீகாரில் அதிகபட்சமாக 1.13 கோடி பேரும், உத்தரபிரதேசத்தில் 1 கோடி பேரும், மகாராஷ்டிர மாநிலத்தில் 45 லட்சம் பேரும், மத்திய பிரதேசத்தில் 40 லட்சம் பேரும், மேற்குவங்கத்தில் 39 லட்சம் பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என மதிப்பிடப் பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல. கடந்த 1997ம் ஆண்டு வறுமைக்கோடு குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பும், 2002ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பும், வெவ்வேறு முறைகளில் எடுக்கப்பட்டிருப்பதால், இரண்டையும் ஒப்பிட இயலவில்லை என்றும் அந்த அறிக்கையில் மத்திய அரசு தனது குழப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது.

வறுமைக் கோட்டுக்கான வருவாய் இலக்கை அதிகரிக்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரியிருப்பதையும் அந்த அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர் அஷ்வினி குமார் அப்போது குறிப்பிட்டார். மாநிலங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு, மத்திய அரசுக்கு சுரேஷ் டெண்டுல்கர் தலைமையிலான நிபுணர் குழு வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.  அந்தக் குழுவின் பரிந்துரையை மத்தியத் திட்டக்குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அஷ்வின்குமார் கூறியுள்ளார்.

மேலும், நகர்ப்புறத்தில் வறுமைக்கோடு குறித்த கணக்கெடுப்பை நடத்துவதற்கான தெளிவான வரையறை இதுவரை கண்டறியப்படவில்லை என்ற உண்மையையும் அப்போது ஒப்புக்கொண்ட அஷ்வினி குமார், சரியான கணக்கெடுப்பு முறை குறித்து ஆய்வு செய்ய மத்திய திட்டக் குழு எஸ்.ஆர்.ஹசீம் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் கூறினார்.

ஆக, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறித்த உண்மையான புள்ளி விபரத்தையே இதுவரை மத்திய அரசால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
வறுமை ஒழிப்பே தமது முதலும் முடிவுமான இலக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதனைக் கண்டறிவதில் எந்த அளவு குழம்பிக் கிடக்கிறது என்பதை, மத்திய அமைச்சர் அஷ்வினி குமாரின் இந்த அறிக்கை நமக்கு தெளிவு படுத்துகிறது.

இதே போன்று, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ள கருத்துகள், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில், மத்திய அரசு காட்டி வரும் அக்கறை எவ்வளவு போலித்தனமானது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் பெருமுதலாளிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வரிச்சலுகையாக அள்ளி வழங்கி இருப்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இந்தப் பணத்தை ஏழை, பணக்காரர்களுக்கு இடையே அதிகரித்துவரும் இடைவெளியை நிரப்புவதற்கு மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் யெச்சூரி வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் (ஐபிஎல் கிரிக்கெட் அணிகளை ஏலத்தில் எடுக்கும் கோடீஸ்வரர்கள்) பிபிஎல் (வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள ஏழைகள்) என மக்கள் இரண்டு பிரிவினராக கூறுபோடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு மற்றும் உணவுப்பொருள் உற்பத்தி விவகாரத்தில், மத்திய அரசு, அண்மையில் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தால், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் இந்த விமர்சனத்தில் பொதிந்துள்ள உண்மை புரியவரும்.

வெங்காயத்தின் உற்பத்தி சரிந்து, அதன் விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்து, மக்களை மூச்சுத்திணற அடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு பக்கம் உருளைக் கிழங்குகளை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பாதுகாத்து வைக்க, நொறுக்குத் தீனி (Junk Foods)  தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது மத்திய அரசு.

ஆனால், விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருட்களை பாதுகாத்து, பதனிட்டு வைப்பதற்கான தொழில் நுட்ப வசதிகளை செய்து கொடுக்க மத்திய அரசுக்கு இதுவரை மனம் வரவில்லை.

சில்லரை வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்து, அந்த நிறுவனங்களுக்கு உணவுப் பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி சேமிப்பதற்கான வசதிகளையும்  மத்திய அரசு செய்துதரத் தொடங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில், விவசாயிகளிடம் இருந்து உணவுப் பொருள்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தப் பணியை செய்துவந்த அரசு கூட்டுறவுப் பண்டகசாலைகள், படிப்படியாக செயலிழக்கச் செய்யப்பட்டு, பின் அவற்றின் மூச்சு முழுமையாக நிறுத்தப்படும்.

இதன் மூலம், உணவுப் பொருள் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு, விநியோகம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கடமைகளில் இருந்து மெல்ல மெல்ல தன்னை விடுவித்துக் கொள்ளும் மத்திய அரசு, பெருமுதலாளிகளின் லாபத்தைப் பெருக்கும் சேவையில் மனமுவந்து ஈடுபட்டு வருகிறது.
                                                    
இப்படி, ஒருபக்கம் மக்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் அமல்படுத்திக் கொண்டு, மற்றொருபக்கம் வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு என்று சொல்லும் மத்திய அரசின் இரட்டை அணுகுமுறை, அபத்தமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

பிரகாஷ் காரட் சொல்வதைப் போல, இந்த அரசை உணர்ச்சியற்ற அரசு என்பதா? அல்லது உண்மையற்ற அரசு என்பதா?

மேனா. உலகநாதன்.
நன்றி : தினமலர் - செய்திமலர்  (நெல்லை)

Tuesday, February 22, 2011


நன்றாகவே….

சில மௌனங்கள்
பல புறக்கணிப்புகள்

பாடம் நடத்தியபடியே
நகர்கிறது காலம்.

இலையுதிர்கால மரத்தில் இருந்து
உதிரும் உயிர்த்துளி
வெள்ளமெனப் பெருகிப் பரவ
துளிர்க்கும்
பசித்த மானுடம்

வசந்தம் சூல்கொள்ளும்
பூக்களின் தேன் துளி
விஷமெனக்
கரைந்து கொல்லும்
விதி எனும்
கற்பிதத்தை

வீழும்போதே எழும் எமது வீறுதனில்
மோதிச்சிதறும் அவர்தம் உன்மத்தம்

எது நடந்ததோ
அது
நன்றாகவே நடந்தது.

மேனா. உலகநாதன்

Thursday, February 17, 2011

ஊழலை ஒழிப்பது எப்படி?


ழலை ஒழிப்பது எப்படி?
மணிமேகலைப் பிரசுரம் வெளியிடும் புத்தகத்தின் தலைப்பைப் போல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?
ஊழலுக்கு எதிராக தற்போது எழுந்துவரும் குரல்கள், வலிமையான அரசியல் அடித்தளத்துடன் கிளர்ந்தெழ வேண்டிய அந்த போராட்டத்தை, இப்படித்தான் மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆனால், அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில், அனைத்து அடித்தட்டு குடிமக்களின், அடிமனதில் ஓயாத அலையாக எழும்பி, எழும்பி ஓயும் இந்தக் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
நேருகாலத்தில் நாட்டையே கலக்கிய முந்திரா ஊழல் தொடங்கி, தற்போதைய 2ஜி அலைக்கற்றை, மற்றும் இஸ்ரோ ஊழல் வரை அடி, முடி காண முடியாத மர்ம முடிச்சுகளுடன், ஊழல் எனும் அந்த விசித்திர மிருகம், வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
வலிமை வாய்ந்த ஜனநாயகத்தால் ஏன் இந்த மிருகத்தை வீழ்த்த முடியவில்லை?
ஊழல் எனும் பெருங்குற்றத்தை, அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம், தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கான சந்தர்ப்ப ஆயுதமாக பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதை கூர்ந்து கவனித்தால், இந்த வரலாற்றுத் தோல்விக்கான காரணம் புரியும்.
அதற்கு, நமது தமிழக அரசியலைச் சற்று பின்னோக்கிப் பார்த்தாலே போதும்.
அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்ற கருணாநிதி மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. விஞ்ஞான ரீதியாக கருணாநிதி ஊழல் புரிந்துள்ளார் என அந்த கமிஷன் கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. (இப்போது விஞ்ஞானிகளே ஊழல் புரிவதை (இஸ்ரோ), எப்படி விமர்சிப்பது? அரசியல் ரீதியாக ஊழல் புரிந்துள்ளார்கள் எனலாமா?)
திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதி மீதான இந்த குற்றச்சாட்டு 1977 பொதுத்தேர்தல் களத்தில், அதிமுக அணிக்கு வசதியான ஆயுதமாக மாறியது. திமுகவைத் தோற்கடிக்கவும் இந்த ஆயுதம் ஓரளவுக்கு பயன்பட்டது.
எம்ஜிஆர் மறைந்ததை அடுத்து, ஏறத்தாழ 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதும் பல்வேறு காரணங்களுக்காக அந்த ஆட்சி கலைக்கப்பட்டது.
1991ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அமோக வெற்றி பெற்று அரியணை ஏறியது. அரசு நிர்வாகத்தில் அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ஊழல், வெளிப்படையான பரிவர்த்தனையாக மாறியது. ஊழலின் கரங்கள் சுடுகாடு வரை நீண்டன.
1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சியின் இந்த வெளிப்படையான ஊழல், திமுகவின் கையில் ஆயுதமாக மாறிச் சுழன்றது. மூப்பனார் தலைமையிலான த.மா.கா வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக, அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என பல வழக்குகள் தொடரப்பட்டன. அவர் கைதும் செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கரன்சிகளை ஆற்றிலும், குளத்திலும் கொட்டி எரித்த காட்சிகள் எல்லாம் அப்போது அரங்கேறின.
2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. இந்த முறை ஊழலை விட, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஜெயலலிதாவின் எதேச்சதிகாரப் போக்கே அவருக்கு எதிரியானது. இதனால் 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு சுலபமானது.
தற்போது மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு வசதியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் எனும் ஆயுதம் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. நிச்சயமாக, இந்த தேர்தலில், எதிர்க்கட்சியினரின் முக்கியப் பாடு பொருளாக ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இப்போதே அதிமுகவினரும், அந்த அணிக்கு ஆதரவாக சில அறிவு ஜீவிகளும், ஊழலுக்கு எதிரான தங்களது குரலை உரத்து எழுப்பத் தொடங்கி உள்ளனர். ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஊழல் எதிர்ப்புச் சங்கை ஊதத் தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டால், ஊழல் ஒழிந்துவிடும் என்று, ஓங்கி, உரத்துச் சொல்லத் தொடங்கி உள்ளனர்.
அப்படியே வைத்துக் கொள்வோம். இதற்கு முன்னர் அப்படி நடந்திருக்கிறதா?
மத்தியிலும், மாநிலத்திலும் இந்த அறுபது ஆண்டுகளில் ஏற்படாத ஆட்சி மாற்றமா?
ஏன் ஊழல் ஒழியவில்லை.
ஊழலை நியாயப்படுத்துவதற்காகவோ, எவரையும் ஆதரிப்பதற்காகவோ  இந்தக் கேள்வியை எழுப்பவில்லை.
பொருளாதாரச் சீர் கேடு என்ற அரசியல் சமூகப் பெருநோயின் வெறும் அறிகுறி மட்டுமே ஊழல் எனும் வெளிப்பாடு. அதுவே மூல நோயல்ல. ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று, விஜயகாந்தைப் போல வீராவேசத்தோடு புறப்பட்ட பலர், அந்த மகாநதிக்குள் கரைந்து போகும் மர்மமும் கூட இதுதான்.
குறிப்பிட்ட ஒருவரிடமே பணம் குவிவதற்கான வாய்ப்பு…. பெரும் பரிவர்த்தனையும், லாபமும் ஈட்டக்கூடிய தொழில்கள் அனைத்தையும், பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பங்குபோட்டுக் கொடுப்பது… அவற்றில் மக்களுக்கு இருக்கும் பொருளாதார உரிமையை அடியோடு மறுக்கும் முதலாளித்துவத்தின் சூட்சுமமான கட்டமைப்பை வலிமைப் படுத்த உதவும் அரசியல் வாதிகள்…
இப்படி, நம் புலன்களுக்கு எட்டாத நுண்தளங்களில் இருந்து ஊற்றெடுக்கும் ஊழலின் பிரவாகத்தை, வெற்றுக் கூச்சல்களால் அணைபோட்டுத் தடுத்து விட முடியாது.
பின் எப்படித்தான் தடுப்பது?
அதனைத் தடுக்க, ஆட்சி மாற்றத்துக்குப் பதிலாக அரசியல் மாற்றம் தேவை.
இன்றைய இளையதலைமுறைக்கு அரசியல் பிடிப்பதில்லை. பிடித்துவிடக் கூடாது என்பதில், கல்வி வியாபாரிகள் முதல், ஊடகங்கள் வரை கவனமாக இருக்கின்றன. முதலாளித்துவம் ஊழலுக்கான சூட்சும வலையை இங்கிருந்துதான் பின்னத் தொடங்குகிறது.
இந்த அரசியல் தீண்டாமை உணர்வுதான், ஊழலின் ஆழமான ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அரசியல் என்றால், அதிமுகவும், திமுகவும் மட்டுமல்ல என்ற உண்மையை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன.
அரசியல் அகற்றப்பட்ட சமூகம் பண்படுத்தப்படாத களர் நிலைத்தைப் போல. அனைத்துச் சீர்கேடுகளும் தங்கு தடையின்றி புதர்களைப் போல மண்டிப் பெருகும்.
இந்தியாவில் தனியார் மயமும், தாரளமயமும் அறிமுகப்படுத்தப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பதினெட்டு ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றுள்ள ஊழல் பரிவர்த்தனையின் மொத்த தொகை 73 லட்சம் கோடி என்று, பெருமுதலாளிகளை ஆதரிக்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகளுமே சொல்கின்றன.
இதைப் புரிந்து கொள்ள, இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான அரசியல் அறிவு தேவை.
தனியார் நிறுவனங்கள் கையில் பெருந்தொழில்கள் ஒப்படைக்கப்பட்டால், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் என பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் அது இப்போது பொய்யாகி இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் மலிவான விலையில் ஒதுக்கப்பட்ட நடவடிக்கை ரகசியமாகவே அரங்கேறி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கூட, நாம் இந்த உண்மயைத் தெரிந்து கொள்ள முடியாது. பிரச்சனை என வந்த பிறகு, பெரு முதலாளிகளின் தந்திரங்கள் அனைத்தும் அம்பலமாகின்றன.
இதில், ஆ.ராசா உள்ளிட்ட அனைவருமே அரசியல் கூலிகள். ரயில்வே நிலையத்தில் சுமைதூக்குவதற்கு உரிமம் பெற்ற போர்ட்டர்களைப் போல, மக்களின் உடைமைகளை முதலாளிகளுக்கு தாரைவார்க்க ஆட்சி அதிகாரம் என்ற உரிமத்தைப் பெற்றிருப்பவர்கள். அவ்வளவுதான்.
இதனைப் புரிந்து கொள்ள அரசியல் அறிவு தேவை.
அது இப்போது இளைஞர்களிடம் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வெற்றிடமும், மூடத்தனமும்தான், நாட்டின் ஒட்டு மொத்த சொத்தையும் கொள்ளையடிக்கும் அளவுக்கு பெருமுதலாளிகளுக்கு துணிச்சலைத் தந்துள்ளது.
ஆட்சி மாற்றங்களால் ஊழலை ஒழித்து விடலாம் என்று உரத்துப் பேசுபவர்களின் உள்நோக்கம், ஊழலை ஒழிப்பதல்ல. மக்களைச் சுரண்டுவதற்கான உரிமையை, தேர்தல் மூலம், அடுத்த முறை தாங்கள் பெறுவது மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊழலை ஒழிக்க ஆட்சி மாற்றம் மட்டுமே போதாது. அடிப்படையான அரசியல், சமூக, பொருளாதார அமைப்பில், அணுகுமுறையில் மாற்றம் தேவை என்ற உண்மையை, கருத்து நேர்மையும், அறிவு நாணயமும் உள்ள அனைவரும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது.
மேனா.உலகநாதன்

20.2.11, தினமலர் - செய்திமலர் (நெல்லைப்பதிப்பு)

Wednesday, February 9, 2011


அவர்கள் காத்திருக்கிறார்கள்!

“ஆவீன மழைபொழிய இல்லம்வீழ..!
அகத்தடியாள் மெய்நோவ‌ அடிமை சாக..!
மாவீர‌ம் போகுதென்று விதைகொண்டோட‌..!
வ‌ழியிலே க‌ட‌ன்கார‌ன் ம‌றித்துக் கொள்ள..!
சாவோலை கொண்டொருவ‌ன் எதிரே தோன்ற‌..!
த‌ள்ள‌வொணா விருந்துவ‌ர‌ ச‌ர்ப்பந்தீண்ட..!
கோவேந்த‌ர் உழுதுண்ட‌ க‌ட‌மை கேட்க‌..!
குருக்க‌ள் வ‌ந்து த‌ட்ச‌ணைக‌ள் கொடு என்றாரே..!!!”

உழுதுண்டு வாழ்பவனின் அன்றாட வாழ்க்கை நெருக்கடியை, சித்தரிக்கும் விவேகசிந்தாமணி என்ற பழந்தமிழ் நூல் பாடல் வரிகள்தான் இவை.
சம்சாரி என்றும் குடியானவன் என்றும் அந்நாட்களில் அழைக்கப்பட்ட ஏழை விவசாயி ஒருவனுக்கு, ஒரே நேரத்தில் நேரும் துயரங்கள்தான் எத்தனை?

‘மாடு கன்று போடுகிறது. அடை மழையோ கொட்டுகிறது. அந்த மழையால், குடியிருந்த வீடும் இடிந்து விழுகிறது. மனைவி திடீரென நோய்வாய்ப்படுகிறாள். உதவிக்கு இருந்த வேலையாளும் திடீரென இறந்து போகிறான். இத்தனை நெருக்கடிக்கு இடையேயும், மழை பெய்த ஈரம் காயுமுன்னே விதைத்துவிட வேண்டும் என்ற பதற்றத்துடன், விதையை எடுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகிறான் அந்த விவசாயி. வழியிலே கடன்காரன் வந்து மறித்துக் கொள்கிறான். அதோடு முடிந்தததா? நெருங்கிய உறவினர் இறந்து விட்டதாக ஒருவன் சாவோலையோடு எதிர்வருகிறான். சரி. இவர்களையெல்லாம் சமாளித்து அங்கிருந்து அவன் நகரும்போது தவிர்க்க முடியாத விருந்தினர் வருகின்றார். அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனால், மகனைப் பாம்பு கடித்து விடுகிறது. அரசன் வரிகேட்டு ஆள் அனுப்பி இருக்கிறான்.  அந்நேரம் பார்த்து ஏற்கனவே செய்த சடங்குகளுக்கு தட்சணை கேட்டு குருக்கள் வந்து நிற்கின்றார்….’

துயரத்தை பட்டியலிட்ட நமக்கே மூச்சுவாங்கும் பொழுது அனுபவித்தவன் பாடு எப்படி இருந்திருக்கும்…?

விவசாயி என்பவனின் நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வருகிறது என்பதை, இந்த பழம்பாடல் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.

காலம் முடியாட்சி முறையில் இருந்து, குடியாட்சிக்கு மாறிவிட்டது.  அரசுகளும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. விவசாய வளர்ச்சிக்கென திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனாலும், சாரசரி இந்திய விவசாயியின் வாழ்க்கைத் தரத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை.

இந்தியா ஒரு விவசாய நாடு என்ற முழக்கத்தை நமது தலைவர்கள் இன்னும் கூட  முற்றாக நிறுத்தி விடவில்லைதான். காரணம் கணிசமான வாக்கு வங்கி கிராமப்புற விவசாயிகளின் கையில் தான் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை குறித்து அவ்வப்போது அவர்கள் கொள்ளும் கவலையும் கூட, நமக்கு ஒரு வாக்கு குறைகிறதே என்ற அடிப்படையில் மட்டுமே அன்றி அக்கறையில் அல்ல.

இது வரை ஏறத்தாழ 78 மத்திய நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் மத்திய அரசின் அடுத்த நிதி நிலை அறிக்கையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பெருந்தொழிலதிபர்களோடு நிதியமைச்சர் பிரணாப் ஆலோசிக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களோடு ஆலோசிக்கிறார். பெரு முதலாளிகளோடு ஆலோசிக்கிறார். எதிர்க்கட்சிகளோடும் கூட வேறு வழியில்லாமல் ஆலோசிக்கிறார்.
ஆனால்… 80 சதவீத மக்களின் வாழ்வாதாரமான  விவசாயம் தொடர்பான நிதி நிலை அம்சங்கள் குறித்து யாரோடும் ஆலோசித்ததாக தெரியவில்லை. அதுதான் மொத்தமாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்களே என்று கேட்கலாம்.

மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூடத் தேறாத பெருமுதலாளிகள் பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தானே அவர்களின் விருப்பத்தைக் கேட்டறிகிறார்கள்.

பெருமுதலாளிகளின் பெருவிருப்பத்தைக் கேட்டறியும் ஆளும் தரப்பு, அன்றாடம் சீரழிந்துவரும் விவசாயிகளின் சிறு விருப்பங்களையேனும் கேட்டறியலாம் தானே…?

இந்த பட்ஜெட்டில் இடம்பெற உள்ள தொழில் துறைக்கான வரிச் சலுகைகள், பன்னாட்டு உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் குறித்தெல்லாம், சில உயர்தர (மேல்தட்டினருக்கான) ஆங்கில வணிக நாளேடுகளில் பக்கம் பக்கமாக யூகங்கள் வெளியிடப்படுகின்றன. அவை யூகங்கள் என்பதை விட, பெருமுதலாளிகள் அரசுக்கு இடும் மறைமுக கட்டளைகள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் விவசாயிகள் குறித்து அவை போன்ற ஏடுகள் மூச்சுக்கூட விடுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை விவசாயமும், விவசாயிகளும் பொருளாதாரத் தொல்லைகள். எப்படியோ அவர்கள் ஒழிந்தால் சரிதான். (தற்கொலை செய்துகொண்டாவது!)

எனினும், கேட்பாரற்று தடுமாறும் விவசாயிகள் நலம் குறித்து சிந்திக்கும் சில சமூக ஆர்வலர்கள், விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2011ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், விவசாய வளர்ச்சிக்கான சில அம்சங்கள்  இடம்பெற வேண்டும் எனவலியுறுத்தி வருகின்றனர். அவை இதுவரை இல்லாத புதிய அணுகுமுறைகைக் கொண்டவையாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் என்ன?

‘விவசாயத்தை வளர்க்க இந்த 60 ஆண்டுகளில் போடாத திட்டங்கள் எதுவும் இல்லை. அவை எல்லாம் விவசாயிகளுக்குப் போய்ச் சேர்கின்றனவா என்பதை முதலில் உறுதிப் படுத்த வேண்டும். உற்பத்தியைப் பெருக்க மானியக் கடன். வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடு. பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு. வறுமையை ஒழிக்க வேலை உறுதித் திட்டம். இப்படி பல திட்டங்கள் செயல்படுத்தப் பட்டாலும், விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை’ என்கிறார்கள் அவர்கள்.

விவசாயிகளின் தேவைதான் என்ன? என்ற கேள்விக்கும் அவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

‘விவசாயிகள் பிச்சைக்காரர்கள் அல்ல. சமூகத்தின் மற்ற எந்தப் பிரிவினரைக் காட்டிலும், சுயமரியாதையோடும், உழைப்பைச் சார்ந்தும் வாழக் கூடியவர்கள். அவர்களுக்கு தேவை தள்ளுபடிகளும், இலவசங்களும் மட்டும் அல்ல. அவை பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வும் அல்ல. நவீன மாற்றங்களின் தாக்கத்தால் விவசாயத்தில் ஏற்படும் புதிய சவால்களை சந்திக்க அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். உதாரணமாக, உற்பத்தியைப் பெருக்க திட்டம் என்பது காலாவதியாகிப் போன பழைய உத்தியாகி விட்டது. இப்போது சந்தை முக்கியப் பிரச்சனையாகி விட்டது. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான சந்தை எது என்பதே தற்போதைய பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு அரசிடம் உள்ள தீர்வு என்ன? உற்பத்திக்கு உரிய விலை அதற்கான சந்தையில் தான் கிடைக்கும். இந்த சந்தையைத் தீர்மானிப்பதிலும், உருவாக்குவதிலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

வியாபாரிகள் என்ற போர்வையில் விவசாயிகளின் உற்பத்திக்கான லாபத்தை உறிஞ்சும் இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும். அரசு உருவாக்கும் லாப நோக்கமற்ற கொள்முதல் நிலையங்கள், தானியங்களை பதப்படுத்தி பாதுகாக்கும் வசதிகளோடு அமைய வேண்டும். நகர்ப்புற மக்கள் உள்ளிட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த தேவை, உற்பத்தி, தடையற்ற விநியோகம் இந்த மூன்றுக்கும் இடையில் ஒழிவு மறைவற்ற பரிவரத்தனைச் சங்கிலித் தொடரை உருவாக்க வேண்டும். இது அரசால் மட்டுமே முடியும். பன்னாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதன் பலன் விவசாயிகளைச் சென்றடையாது. (உதாரணம் - தற்போது உள்ள ரிலையன்ஸ் பிரஷ் உள்ளிட்ட மெகா ஸ்டோர்கள்)

அரசு கொள்முதல் நிலையங்கள் இப்போதும் உள்ளன. காலக்கட்டுப்பாடு, தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தடைகளால் விவசாயிகள் பெரும்பாலும் இழப்பையே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீக்கப்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்காக நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் நவீனக் கட்டமைப்பு வசதிகளுக்கு செய்யும் செலவில், பத்து சதவீதம் கிராமப்புற கட்டமைப்புகளையும், கொள்முதல் நிலையங்களையும் நவீனப்படுத்த செலவிட்டாலே, விவசாயிகளின் 90 சதவீதப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

உற்பத்தி – உரிய விலை – தடையற்ற விநியோகம் என்ற பரிவர்த்தனை உத்தியை வலிமைப் படுத்துவதன் மூலம் மட்டுமே விவசாயத்தை ஒரு கௌரவ மிக்க தொழிலாக வளர்த்தெடுக்க முடியும். எவரும் தயங்காமல் நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் நிலை உருவாகும். வரும் மத்திய நிதி நிலை அறிக்கையில், விவசாயத்திற்கான திட்டங்கள் இதனை அடிப்படையாக கொண்டு தீட்டப்பட வேண்டும். மொத்தத்தில், கிராமப்புறங்களை வளப்படுத்தும் விவசாயம் சார்ந்த திட்டங்களில், வெறும் வறுமை ஒழிப்பு என்பதில் இருந்து அடுத்த கட்டத்தை நோக்கி, அரசின் அணுகுமுறை எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே, விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த நெடுங்காலப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.’

விவசாயம் மற்றும் விவசாயிகள் குறித்து கவலை கொள்ளும் மிகச்சில சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள இந்த கருத்துகளை நமது மத்திய அரசு கவனத்தில் கொள்ளுமா? 2011ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் அதற்கான திட்டங்கள் இடம்பெறுமா?

60 ஆண்டுகளுக்குப் பின்னரும், இந்த அரசு மீது நம்பிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள் இந்திய விவசாயிகள்.
மேனா.உலகநாதன்

13.2.2011, தினமலர் செய்திமலர் (நெல்லைப் பதிப்பு).

Thursday, February 3, 2011

என்ன குற்றம் செய்தார்கள்?



நான் அப்போது நிறைமாத கர்ப்பிணி. மனிதக் கழிவுகளை அகற்றிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டேன். அப்போது எவ்வளவு கதறியும் என்னை கை கொடுத்துத் தூக்க யாரும் முன்வரவில்லை. கழிவோடு கழிவாக புறக்கணிக்கப் பட்டேன். பொதுவாக எங்களைப் பார்த்தாலே மூக்கைப் பொத்திக் கொண்டு, இரண்டு கைகளையும் ஆட்டி போ, போ என்று கூறி விரட்டுகிறார்கள்’

அனிதா, பஞ்சாப் மாநிலம்.

‘நான் பள்ளியில் படித்த போது என்னை மட்டும் வேறு தட்டு மற்றும் குவளை எடுத்துவரச் சொல்லி விரட்டுவார்கள். கேட்டால் என் தாயார் மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை பார்த்துவருகிறாராம். இன்று வரை பள்ளிகளில் என் போன்ற குழந்தைகளுக்கு இந்த கொடுமை தொடர்கிறது. எங்கள் பிள்ளைகள் ஏன் பெரிய படிப்பு படிக்க முடியவில்லை. கலெக்டர் ஆக முடியவில்லை….’

உமையாள், தமிழ்நாடு.

டெல்லியில் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan) என்ற அமைப்பு சார்பில், சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பெண்களிடமிருந்து பீறிட்ட, ஆயிரமாண்டுகால ரணத்தின் ரத்தம் தோய்ந்த வார்த்தைகள்தான் இவை.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மனிதக்கழிவுகளை கையினால் அள்ளும் துப்புறவுப் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள். அதில், தமிழகத்தில் இருந்து உமையாள் என்ற தமிழ்ப்பெண்ணும் கலந்து கொண்டிருக்கிறார்.

‘சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்லுகிறீர்களே… எங்களுக்கு மட்டும் அது இல்லையா? குறைந்த பட்சம் மனிதர்களாக கூட எங்களை இங்கே யாரும் மதிக்க மறுக்கிறார்களே? வீடுகளுக்குள் மட்டும் அல்ல. பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் இப்படி எங்குமே நாங்கள் மனிதர்களாக நுழைய முடியவில்லையே…மலம் அள்ள மட்டும் தானே எங்களை அனுமதிக்கிறார்கள்? ஏன்? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்?’

அந்த பேரணியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களும் அவரவருக்குத் தெரிந்த மொழியில் எழுப்பிய இந்த கேள்வி, இந்திய ஆன்மாவின் சிண்டைப் பிடித்து உலுக்குவதாக இருந்தது.

அந்த பேரணியில் அவர்கள் முன்வைத்த முழக்கம் என்ன தெரியுமா?

‘எங்களை சுயமரியாதை இன்றி நடத்திய அரசே மன்னிப்பு கேள்… மன்னிப்பு  கேள்’

மன்னிக்கக் கூடிய கொடுமையையா இந்த நாடும் சமூகமும் அவர்களுக்குச் செய்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

மத்திய அரசு இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

ஏன்?

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலத்தைத் தடுக்கும் வகையில், கடந்த 1993ம் ஆண்டிலேயே, உலர் கழிப்பறைகள் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த சட்டம் அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. அது மட்டுமல்ல.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் வழக்கம் அதிக அளவு நடைமுறையில் இருப்பது மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் ரயில்வே துறையில்தான்.

மற்றபடி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இப்படி அரசின் அனைத்து அதிகார மட்டத்திலும், இந்த இழிவு இன்றுவரை முழுமையாக நிறுத்தப்படாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று, சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உலர் கழிப்பறைகள் அமைக்கத் தடைவிதிக்கப் பட்டிருந்தும் பல இடங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களிலேயே அவை அமைக்கப்பட்டிருப்பதை அந்த மனு சுட்டிக்காட்டியது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழகத்தில் மனிதக் கழிவுகளை கையினால் அகற்றும் பணியில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது என அப்போது தடைவிதித்தது. 

மேலும், இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து, கையினால் மனிதக் கழிவுகளை அள்ளும் வழக்கத்தை ஒழிப்பதுடன், அந்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கு வது குறித்தும் அவ்வப்போது ஆலோசிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை எனக் கூறி, அந்த தொண்டு நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த வாரம் திங்கள் கிழமை (31.1. 11) சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். அப்போது தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு இது தொடர்பாக  கடந்த மாதம் 25ம் தேதி எழுதிய கடிதத்தின் நகல் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

எப்படியோ, விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு, இது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு வகை செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதி மன்றம் தன் பங்குக்கு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவை ஒழிக்க முடிந்தவரை முயற்சித்திருப்பதை மறுப்பதற்கில்லை.

சட்டம் ஒழுங்கு குறித்து சதா கவலை கொள்ளும் நமது அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், இது போன்ற சட்டங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பைக் கூட கொடுப்பதில்லை என்பதுதான் இதில் வேதனை.

அரசியல் சட்டத்தையோ, அதனை உருவாக்கிய அம்பேத்காரையோ மதித்திருந்தால், இன்று வரை இந்த பழக்கம் தொடர அனுமதித்திருப்பார்களா? அவர்ளைப் பொறுத்தவரை, சட்டம் ஒழுங்கு என்பது ஆளும்கட்சியாக இருக்கும் போது அதிகாரம் செலுத்தவும், எதிர்க்கட்சியாக இருக்கும்  போது பழி சுமத்தவும் மட்டுமே பயன்படும் வசதியான ஆயுதம்.

மற்றபடி எளிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட எந்த சட்டத்தையும் இவர்கள் மதிப்பதே இல்லை. அதன் விளைவுதான் தீண்டாமைக் கொடுமை தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அது தொடர்ந்து கொண்டிருப்பது. அதன் மிக அருவருக்கத்தக்க மற்றொரு முகம்தான், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது.

அந்த சமூகத்தில் பிறந்ததைத் தவிர அந்த பரிதாபத்துக்குரியவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

மனித இனத்தின் நாகரிகம் குறித்து பெருமிதம் கொள்ளும் ஒவ்வொருவரது மனச்சாட்சியையும் பிடித்து உலுக்கும் இந்த கேள்விக்கு நாம் சொல்லப் போகும் பதிலும்தான் என்ன?

மேனா. உலகநாதன் 

6.2.11, தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு)