Tuesday, December 21, 2010

கட்டுரை


ஜனநாயகத்தின் சண்டாளர்கள்!

லைவரிசை ஒதுக்கீட்டுப் புகாரை முன்னிறுத்தி நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளை, வட இந்திய ஊடகங்கள், ஆங்கிலமா ஹிந்தியா என அடையாளம் கண்டறிய முடியாத வினோதமொழியில்,   விலாவாரியாகக் கடைவிரித்துக் கொண்டிருந்தன.

அந்த ஜனநாயக சங்கடத்தைப் பார்த்த படியே நாளேட்டைப் புரட்டிய போது கண்ணில் பட்ட மற்றொரு செய்தி, அத்தகைய சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் விதார்பா மாவட்ட விவசாயிகளுக்கு அப்போதையை முதலமைச்சரே இழைத்த கொடுமை குறித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த கண்டனம் தொடர்பான செய்திதான் அது.

விதார்பா மாவட்டத்தை அத்தனை சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 1997 முதல், 2008ம் ஆண்டு முடிய சுமார் பத்து ஆண்டுகளில், அந்த மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த  2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர்.

மனித வரலாற்றிலேயே, குறிப்பிட்ட ஒரு பிரச்சனை தந்த அழுத்தத்தால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு நடந்ததில்லை என்பது, மானுடவியாலாளர்களின் கருத்து.

இத்தகைய வரலாற்றுக் கொடூரத்துக்கு ஆளான அந்த அப்பாவி விவசாயிகள் பலரின் தற்கொலைக்குக் காரணமாக, அந்த மாநிலத்தின் அப்போதைய முதமைச்சரே இருந்துள்ளார் என்பதுதான் இதில் உச்சக்கட்ட சோகம்.
அவர் வேறு யாருமல்ல. தற்போது மத்திய அமைச்சராக வலம் வந்து கொண்டிருக்கும் விலாஸ்வராவ் தேஷ்முக்தான்!

அப்படி அவர் என்னதான் செய்து விட்டார்?  

மகாராஷ்டிர மாநிலத்தின் அப்போதைய காங்கிரஸ் எம்எல்ஏ திலீப்குமார் சனந்தா என்பவரும், அவரது குடும்பத்தினரும், விதார்பா மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளனர்.
குறைந்தது மாதம் ஒன்றுக்கு 10 சதவீதம் வட்டி என்றால் எந்த விவசாயியால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்?

மானத்தைப் பெரிதாக கருதும் விவசாயிகள், அதனை விட முடியாமல் உயிரை விடும் அவலம், அம்மாவட்டத்தில் தொடர்கதையானது.

இந்தக் கொடுமை குறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாகப் புகார் அளித்துள்ளனர்.
ஆனால் அந்தப் புகார்கள் மீது, அம்மாநிலக் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதததுடன், வழக்குப் பதிவு செய்யவும் மறுத்து விட்டது.

தங்களுடைய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மறுப்பதாக, மகாராஷ்டிர மாநில உயர் நீதி மன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாயிகளின் புகார் தொடர்பாக காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதனைப் பதிவு செய்ய மறுத்ததற்கு அபராதமாக அரசு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதற்குப் பின்னரும் அம்மாநில அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டியதைத் தொடர்ந்து, விவசாயிகள் உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், இந்தப் பிரச்சனை குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு, முதலமைச்சர் விலாஸ்வராவ் தேஷ்முக்கின் அந்தரங்க உதவியாளர், தொலை பேசி மூலம் எச்சரித்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2006ம் ஆண்டு, மே மாதம் 31ம் தேதி, முதலமைச்சரின் உதவியாளர், தொலை பேசி மூலமாக, மாவட்ட ஆட்சியருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே, அரசு இயந்திரத்தை ஏழைகளுக்கு எதிராகப் பயன்படுத்தி இருக்கும் இந்தச் சம்பவம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாகாராஷ்டிர மாநில அரசுக்கு விதித்த அபராதத் தோகையை 10 லட்சம் ரூபாயக அதிகரித்து உத்தரவிட்டதுடன், உடனடியாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கும் அவர்கள் கட்டளை இட்டுள்ளனர்.

ஜனநாயக அமைப்பில், தங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள எல்லைக்கு உட்பட்டு, அவர்களால் செய்ய முடிந்தது இவ்வளவுதான் போலும்.

பன்னாட்டு நிறுவனங்களைக் களமிறக்கி, விதைகள், உரம் என அனைத்திற்கும் விவசாயிகளைக் கையேந்த வைத்தது, மத்திய அரசு என்றால், மாநில அரசின் அதிகார பீடத்தில் இருப்பவர்கள், அந்த மக்களிடமே கந்து வட்டிக்குப் பணம் கொடுத்துள்ளனர்.

என்ன ஒரு ஜனநாயகம்?

இதில் நீ செய்த ஊழல் பெரிதா, நான் செய்த ஊழல் பெரிதா என்ற பட்டி மன்றம் வேறு.

பல லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம் அனாயசமாக அரங்கேறிக் கொண்டிருக்கையில், இது என்ன பிரமாதம் என்று சிலர் கேட்கலாம்.
அவற்றால் அரசுக்கு நேர்ந்ததாகச் சொல்லப்படுவது வருவாய் இழப்பு மட்டும்தான்.

ஆனால், ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஏழை விவசாயிகளுக்கு, ஆட்சியில் இருப்பவர்களும், அவர்களது ஆட்களும் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்து, தற்கொலைக்குள் தள்ளி விடும் குரூரம் சகிக்க முடியாதது.

லட்சியப் பிடிப்பும், கொள்கை உறுதியும், நேர்மையும் மிகுந்த அரசியல் தலைவர்கள் இல்லாமல் போயிருக்கலாம்.

அடியாட்களுக்கும், கொலைகாரக் கூலிப்படையினருக்கும் இருக்கும், குறைந்த பட்ச மனித இரக்கம் கூடவா, அரசியல்வாதிகளிடம்  இல்லாமல் போய்விடும்?
போய்விட்டது என்பதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

ஊழலும், சுரண்டலும் அரசியலை விழுங்கும் ஆக்டோபஸ்களாக, விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை எத்தனையோ நிகழ்வுகள் மூலம் நாம் உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், அவை எல்லாவற்றையும் விட, மிக மோசமான, கொடூரமான உதாரணம் இது.

விலாஸ்வராவ் தேஷ்முக் என்பவர், இன்றைய அரசியல்வாதிகளின்  கீழ்மைத் தனத்திற்கு, வெளிப்படையான குறியீடு மட்டுமே.

மற்றபடி இது விதார்பா மாவட்டத்தில் மட்டுமே நடப்பது அல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஏழ்மைக்கும், வறுமைக்கும் தம்மை ஒப்புக் கொடுத்து விட்டு, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்ற மனநிலையோடு, மரணத்திற்காகக் காத்திருக்கும், அப்பாவி விவசாயிகளின் நிலையும் இதுதான்.

ஜார்கண்டில், ஆண்டுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு கூலியாகக் கொடுக்கப்படும் காசோலைகளை மாற்றித்தர அவர்களிடமே சிலர் கமிஷன் வாங்குவதாக, அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர்,  ரிசர்வ் வங்கிக் கவர்னர் சுப்பாராவ் முன்னிலையிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற ஏழைகள் மீது, நமது அரசுகளும் அமைப்பும் கொண்டுள்ள பரிவும், அக்கறையும் எத்தகையது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் படும் சிரமத்திற்காக (!) கண்ணீர் வடிக்கும் நமது பிரதமர், கஞ்சிக்குப் போராடும் இந்த எளியவர்கள் குறித்தும் சிறிது அக்கறை செலுத்தலாம். அதனால் பெரிய அரசியல் பிழை ஒன்றும் நேர்ந்து விடாது.


மேனா. உலகநாதன்

தினமலர் - செய்திமலர் (நெல்லைப் பதிப்பு) 19.05.2010


Thursday, December 16, 2010

தொடக்கம்

முடிவின் பயணம்
தொடங்கிவிட்டது
அதன் வாலைப் பிடித்தபடியே
பின்தொடரும் எனது
வழி…

ஒற்றையடிப் பாதையாய்
குறுகலான செடிப்புதர்களாய்
மேடும் பள்ளமுமாய்
கற்களும் முற்களுமாய்
அவ்வப்போது அகன்ற
சாலையும்…

சுவடுகளைத் திரும்பிப்
பார்க்க மனமின்றி
பயணிக்கும் எனது
மூர்க்கம்
வேட்கை தணிந்து
இளைப்பாறுவது எப்போது….?

மேனா.உலகநாதன்


Saturday, December 11, 2010




மாற்றி யோசிக்கலாமே…….

‘வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடிஉயரும்
குடிஉயரக் கோனுயர்வான்’

விவசாயம் எனும் உயிர்த்தொழிலின் அவசியத்தை உணர்த்த, தமிழ் மூதாட்டி ஔவை சொல்லி வைத்த அறவுரை இது.

நவீனத்தின் பாய்ச்சலில், எத்தனையோ தொன்மங்களும், விழுமியங்களும் அர்த்தம் இழந்து வரும் நிலையில், ஔவையின் இந்த மூதுரை மட்டும், நம் மண்ணின் அறமாக இன்றும் நீடித்து வருகிறது.

என்னதான் நவீனப் பொருளாதாரப் புலிகள் அதை இல்லை என அடிக்கப்பார்த்தாலும், இந்த நாட்டின் முதல் தொழிலாகவும், முழுத்தொழிலாகவும் விவசாயமே இன்றுவரை நிலைத்து வருகிறது.
ஆனால், இயற்கையின் சுழற்சி அப்படியே நீடிக்கவில்லை. அதில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக, பருவநிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.
வடமேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்கள் உரிய காலத்தில் தொடங்கி உரிய காலத்தில் முடிவது இல்லை.
  
‘பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும்’ என்ற விவசாயப் பெருமக்களின் வழக்கு மொழி முன்னெப்போதையும் விட, அண்மைக்காலமாக மெய்யாகி வருகிறது. 

ஆண்டு தோறும், சம்பா பருவ நடவு முடிந்து, சில தினங்களுக்குள் கனமழை பொழிவதும், பயிர்கள் பாழாவதும், அண்மைக் காலமாக தொடர்கதையாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாகப் பெய்த கனமழையால், கடலூர் மாவட்டத்தில் மட்டும் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பயிர்கள் நீரில் மூழ்கியதாக, அப்பகுதியை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா மாவட்டங்கள் குறித்து சொல்ல வேண்டியதில்லை. கடும் சேதமும், பெரும் பாதிப்பும் அப்பகுதி விவசாயிகளைக் கலக்கமடைய வைத்துவிட்டது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி என, தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், மழை விட்டுவைக்க வில்லை.

நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் தமிழக அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது.
 ‘முன்பெல்லாம் தான் மழை பெய்தது. ஆனால் அது இத்தனை பேரழிவுகளை ஏற்படுத்துவதில்லை’ சில கிராமத்து முதியவர்கள் வெளிப்படுத்தும் இந்த அதிர்ச்சி கலந்த வேதனையில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், கிராமப் பகுதிகளில் ஒரு கட்டாயமான பழக்கம் இருந்தது. விவசாயப் பருவம் முடிவடைந்து, கோடைக்காலத்தில் விவசாயிகள் ஓய்வாக இருப்பார்கள்.

அப்போது அந்தக் கிராமத்திற்கான நீராதரங்களுக்கு தண்ணீர் வரும் வழிகளையும், நிரம்பிய பின்னர் அதனை வெளியேற்றுவதற்கான வடிகால்களையும், தூர் வாரித் தூய்மைப் படுத்தும் பணி இயல்பாக மேற்கொள்ளப் படுவதுண்டு.

இதற்கு அரசு சார்பில் உதவியோ, உத்தரவோ எதுவும் பெறப்படுவதில்லை. வீட்டுக்கு ஒரு ஆள் என்ற முறையில், கிராமத்து பொதுமக்களே முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்துவார்கள்.

இந்த நடைமுறைக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில்  ‘கிராம ஊழியம்’ என்றே ஒரு பெயருண்டு.

ஆனால், தற்காலத்தில் இந்த நடைமுறை முற்றிலும் கைவிடப்பட்டு விட்டது. நீர் நிலைகளின் மராமத்துப் பணிகளுக்கு முற்றிலும் அரசு நிர்வாகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனநிலைக்கு மக்கள் ஆளாகி இருக்கிறார்கள்.

இதனால், பெரும்பாலான கிராமங்களில், ஏரி குளங்களுக்கு தண்ணீர் வரும் வழியும் சரி, வெளியேற்றப்படும் வழியும் சரி, புதர் மண்டியே காணப்படுகிறது.
தண்ணீர் வருவதும் சிரமம். வந்தால் வெளியேறுவதும் சிக்கல்.

இதனால் கால்வாய்களில் பெருக்கெடுக்கும் மழை நீர், ஏரிகளைச் சென்று அடைய வழி இல்லாமல், நேராக வயல்வெளிகளுக்குள் பீறிட்டுப் பாய்கிறது. ஏரியில் பெருகும் நீரோ, வெளியேற முடியாமல் கரைகள் உடைப்பெடுத்து, வயல் வெளியை மூழ்கடிக்கிறது.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட, இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட மேலும் சில தலைவர்கள், அடிப்படையான இந்தப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

நீர்நிலைகள் தூர்வாரப்படாததுடன், அவற்றுக்கான நீர்வரத்து மற்றும் போக்கு வழிகளும் பாழடைந்து கிடப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ள நிவாரணப் பணிகளில் ஒன்றாக, நீர்நிலைகளையும், அவற்றின் நீர் வரத்து மற்றும் போக்குக்கான வழிகளையும் சீரமைப்பதில் அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 39 ஆயிரம் நீர் நிலைகள் இருந்த இடம் தெரியாமல், ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்பட்டு விட்டதை,  சில ஆண்டுகளுக்கு முன்னரே சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

எஞ்சி இருக்கும் நீர் நிலைகளையேனும் உரிய முறையில் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, பொதுமக்களின் கடமையும் கூட.
மழை வெள்ளப் பாதிப்பு குறித்த ஆய்வுப்பணியில், நீர் நிலைகள் குறித்த இந்த கணக்கெடுப்பையும் அரசு சேர்த்துச் செய்தால், அடுத்த மழைக்காலத்திலாவது, வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து ஓரளவேனும் தப்ப முடியும்.

இது ஒரு புறம் இருக்க, கால மாற்றத்தால் ஏற்படும் இத்தகைய இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள இதுவரை நாம் என்ன வியூகம் வகுத்திருக்கிறோம்?
பனி, மழை, வெயில் என இயற்கையின் பருவமாற்றங்கள் அனைத்தும் அளவுக்கு மீறிய உக்கிரத்துடன், பூமிப்பந்தைத் தாக்கத் தொடங்கி உள்ளன.

ஐரோப்பிய நாடுகளில் கொட்டித் தீர்க்கும் கொடும் பனியும், கீழை நாடுகளில் பெய்து தீர்க்கும் பேய் மழையும் இதனை ஆண்டுதோறும் நமக்கு உணர்த்தி வருகின்றன.

மற்ற நாடுகளைக் காட்டிலும், மண்ணையும், மழையையும் சார்ந்திருக்கும் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட நாம்,  இது குறித்து அதிகம் சிந்திக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற நமது முன்னோர்களின் பழ மொழியை, வேளாண் தொழிலுக்கான அடிப்படை விதியாக இனியும் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஆடி மாதம் நாற்றுப் பாவி, ஆவணியில் நடவு செய்த சில தினங்களுக்குள்ளேயே பெருமழை பெய்து பயிரை மூழ்கடித்து விடுகிறது.

இல்லாவிட்டால், நெற்பயிர் முற்றி, அறுவடைக்கு தயாரக உள்ள நேரத்தில் பெய்து, விளைந்த பயிரை நாசம் செய்து விடுகிறது.

இப்படிக் காலம் தவறிப்பெய்யும் மழைக்குத் தகுந்தவாறு நமது விவசாய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது குறித்து, வேளாண் வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்து, விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

விவசாய முறைகளிலும், காலத்திலும் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி, வேளாண் வல்லுநர்கள் யோசிக்கலாமே?

மேனா. உலகநாதன்

நன்றி : 12. 12. 2010, தினமலர் – செய்திமலர்

Thursday, December 9, 2010

இப்போது…


பாறைகளின் மௌனம் 
உங்களுக்குப் பிடிக்குமா
அலைகளை விழுங்கிச் செரிக்கும் 
அதன் உன்மத்தம்
வாழ்வின் பருகத் தீராத மது

மோதிச் சிதறும் 
அலைத்துளிகளின் திவலைகள்
தரும் போதத்தில் 
இன்னும் இன்னும் இறுக்கம்
கொண்டு புடைக்கும் 
அதன் திமிர்
ரசிக்கத் தீராத சாகசம்

ஆங்காரத்துடன் வருவதும் 
அடிபணிவதுமாய்த்
திரும்பும் அலைகளின் 
தோல்வியில்
அதன் கம்பீரம் 
மேலும் உயிர்க்கிறது

எல்லோரும் நினைத்தார்கள்
வாழ்வின் மூர்க்கம் 
விளிம்பில் நிற்கும் எமை 
வீழ்த்தி விடுமென்று
எறும்பூரத் தேயும் கல்லோ 
நாம் கரைவதற்கு

காலம் சிதறுகிறது
கடவுள் அழுகிறான்

நம்பிக்கை அனைத்தும் 
வற்றிப் போன கடலின் வெறுமை
அவனைச் சஞ்சலம் கொள்ளச் செய்கிறது.

இப்போது
பாறையின் புன்னகைக்குள்
அவன் மெல்லப் புதைகிறான்.
மேனா.உலகநாதன்

Tuesday, December 7, 2010


நெருடல்
-----------------------------------------------------------------------

அவரைப் பார்த்தும்
பாராதவனாய்த் திரும்பிக் கொண்டேன்

பார்க்காமல் போகிறார்
என்பதைப் பார்க்காமல்
பார்த்திருக்கலாம்தான்

கேள்வியும் பதிலும்
உள் நெருடியது

பார்த்தும் பாராமையை
பார்த்தும் பாராமல் சென்ற
அவரின் பக்குவம் பார்த்தும்
பாராத நான்.  

மேனா. உலகநாதன்







அம்மத்தாள்

பக்கங்கள் படபடக்க
எப்போதும் என்னுள் விரியும்
நைந்து பழுப்பேறிப்போன
பழந்தமிழ்ப் புத்தகம்

நான் குழையும்போதெல்லாம்
திறந்து கொள்ளும்
அவளின்
பொக்கைவாய்ச் சொர்க்க வாசல்

மரணக்கதவுகளால் மூடப்பட்டும்
மறுபடி மறுபடி மனசுதட்டும்
அவள் நினைவசைவு

அவள் தந்த கருவாடும் கஞ்சியும்
கம்ப்யூட்டர் யுகத்தின்
நாசிகள் அறியா
வாசனை அற்புதம்

சுருங்கிய தோல் மடிப்புகளுக்குள்
நுழைந்தும் அலைந்தும்
என் ஜீவன் நுகர்ந்த பந்தம்
இன்னும் தேங்கிக் கசிகிறது
உயிர்ச்சுனையில்

கொட்டவும் முடியாமல்
பத்திரப்படுத்தவும் முடியாமல்
திரிந்து போன என்
வாழ்வுப் பாலுடன்
அவளது நினைவுகளும்.

மேனா. உலகநாதன்